Tuesday, December 27, 2016

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்!

கிளிக்காவியம் ('தித்திக்காதே' தொகுப்பு) - மனுஷ்ய புத்திரன்

"நதிகள் உடைந்து
எனது நகரம் மூழ்கத் தொடங்கிய நாளில்
மக்கள் மேட்டு நிலங்களை நோக்கி
பைத்தியம் பிடித்தவர்களாக ஓடினார்கள்
யாருக்கும் உணவில்லை
தண்ணீர் இல்லை
கடைகள் மூடப்பட்டுவிட்டன
வளர்ப்பு நாய்களின் செத்த உடல்கள்
நீரில் மிதந்து சென்றன

நான் என் கிளிகளுக்கு
பழங்கள் கேட்டு
கொட்டுகிற மழையில்
தெருத்தெருவாக அலைந்தேன்
மூடப்பட்ட கடைகளின் கதவுகளை
கோபத்துடன் எட்டி உதைத்தேன்
ஒரு நகரத்தின் குழந்தைகள்
பசியோடு அழுதுகொண்டிருந்தபோது
நான் என் கிளிகளுக்கு
உணவு கொடுங்கள் என்று
நிர்பந்தித்தேன்."

இந்த வரிகளை சாரு நிவேதிதா வாசிக்கும்போது இடையில் சொல்கிறார்: "நானும் நிர்பந்திதேன், என் நாய்களுக்காக".




முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இறந்த அன்று நகரத்தில் எங்கும் கடைகள் திறந்திருக்கவில்லை. சரி, எங்குமே கடைகள் இல்லையெனில் செல்வகுமார், பிரபு காளிதாஸ், முத்துக்குமார் வீடுகளுக்கோ, மருத்துவ நண்பர்கள் வீடுகளுக்கோ சென்றுவிடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். சாரு காலையில் தொலைபேசியில் கேட்டார், எங்கு சாப்பிடப் போகிறீர்கள் என்று . ஏதேனும் கடை திறந்திருக்கும், தேட வேண்டும் என்று கூறினேன். செல்வகுமாரும் தொலைபேசியில் கூப்பிட்டு, எங்கும் கடை இல்லையெனில் வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லியிருந்தார். பேருந்துகள் ஓடவில்லை.

பிஸ்கட், பழங்கள் ஆகியவை ஒரு வேளைக்குத்தான் உதவும் என ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தில் உணர்திருந்தேன் - காவிரி பிரச்னை பந்த் அன்று.

முக்கால் மணி நேரம் தேடியும் ஒரு கடைகூட திறந்திருக்கவில்லை. செல்வா வீட்டுக்குப் போக ஆட்டோ பிடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, பிரதான சாலையில் கோயில் அருகில் கோயில் பணியாளர்கள் ஓரிருவர் பார்சல் பேப்பரில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கடை ஏதேனும் திறந்திருக்கிறதா என்று கேட்டேன். அருகில் உள்ள கடையை சொல்லி, அங்கு பாதி ஷட்டர் போட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றார்கள். அங்கு சென்று பார்சல் வாங்கிக்கொண்டேன். மட்டமான உணவு. வேறு வழி இல்லை. மூன்று வேளையும் அதேபோல்.

க.நா.சு. எழுதியுள்ளார், பேச்சிலர்களுக்கு ஒரு நாள் என்பது மூன்று வேளை, என்று.

பப்பு, ஸோரோ, ச்சிண்ட்டூ, ப்ளாக்கி, ப்ரௌனி, வொயிட்டி ஆகிய சாருவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அன்று மீன் தீர்ந்துவிட்டது. சாரு பிரபுவை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வந்து போக முடியுமா என்று கேட்டிருக்கிறார். பிரபு வந்தவுடன் அவருடன் மோட்டார் பைக்கில் பட்டினம்பாக்கம் மீன் சந்தைக்கு சென்று நாய்களுக்கும் பூனைகளுக்கும் தேவையான அளவு மீன் வாங்கிக்கொண்டு வந்துள்ளார்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் சாரு பிரபுவிடம் சொல்லியுள்ளார், ஸ்ரீராம் இன்று எங்கு சாப்பிடுவார் என்று தெரியவில்லையே, என்று. நான் வேண்டுமானால் உணவை டிஃபன் கேரியரில் போட்டு ஸ்ரீராம் வீட்டுக்குக் கொண்டு செல்லவா என்று பிரபு கேட்டுள்ளார். (என் வீட்டுக்கு வர கடற்கரை சாலையைத் தாண்டி வர வேண்டும்; அங்குதான் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் நடக்க இருந்தது.) "அவர் பிஸ்கட் பழங்கள் சாப்பிட்டு manage பண்ணிக்குவாரு. நீங்க அந்த வழியாகப் போயி சிக்கிக்காதீங்க," என்று சாரு சொல்லியுள்ளார். மதியம் மூன்று மணிக்கு சாரு தொலைபேசியில் அழைத்தார், "ஸ்ரீராம், எங்க சாப்பிட்டீங்க?"

சொன்னேன். ஆசுவாசமாக சிரித்தார்.

அடுத்த நாள், தினமும் சாப்பிடும் உணவகத்தில் அதன் உரிமையாளர் கேட்டார், "நேத்து வந்திருக்கலாம்ல சார்."

***

அடுத்த ஊரடங்கு நடப்பதற்கான அறிகுறிகள் சென்ற வாரம் அரங்கேறின. (நல்ல வேளை நடக்கவில்லை.) கூச்சப்படாமல் உணவக உரிமையாளரிடம் சொன்னேன், நாளை வருகிறேன்; உங்கள் உணவை எனக்கும் தாருங்கள் என்று. வீட்டுக்கே கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீங்க சார் என்றார்.

Wednesday, December 14, 2016

சாரு நிவேதிதா என்ற வசீகரன்

விசாரணை 'பாராட்டு விழா' கூட்டத்தில், அந்தப் பெண் தொகுப்பாளர், "வசீகரமான தோற்றம் கொண்ட சாரு நிவேதிதாவை பேச அழைக்கிறேன்," என்று சொன்னார். ஆனால், ஸ்ருதி டிவியும் வேறு எந்த YouTube சேனலும் அதைப் பதிவு செய்யவில்லை. (அந்த உரையை இது வரை  அனைத்து YouTube சேனல்களிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர்.)

"நாப்பது வருஷமா உடலை பரமாரிச்சதோட பலன் இது. Pedicure, manicure, facial, jogging, walking, yoga அப்படின்னு பார்த்து பார்த்து மெனக்கெட்டதோட பலன். யாரும் இதை ஷூட் பண்ணாம விட்டுட்டாங்களே," என்று சாரு அப்போது வருத்தப்பட்டார்.

(படிக்கவும்: எக்ஸைலில்  'பெருந்தேவி சொன்ன பாம்பு கதை', தில்லி கதை மற்றும் எக்சிஸ்டென்ஷலிசமும் ஃபேன்சி பனியனும்)

***

மதியம் ஸைத்தூனில் (எக்ஸ்ப்ரஸ் அவென்யூ எதிரில்) சாப்பிட்டுவிட்டு, நானும் சாருவும் ஆட்டோ பிடிக்க நின்றிருந்தோம்.

(EA வாசலில் நின்றுகொண்டிருக்கும் ஆட்டோவை கேட்டால், தாறுமாறாகக் கேட்பார்கள். மீட்டர் போட மாட்டார்கள். ஸைத்தூனில் இருந்து சாரு வீட்டுக்கு செல்ல, மீட்டர் போட்டால், அறுபது ருபாய் ஆகும்.)

இனி verbatim. (நடந்த உரையாடல் அப்படியே)

"அப்பு ஸ்ட்ரீட் போகணும்," என்று வந்துகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சாரு கேட்டார்.

"எரநூறு ரூபா சார்."

"ஏன், முன்னூறு ரூபா கேளுங்களேன்," என்று சொல்லிவிட்டு, வேறு ஆட்டோ பார்க்க ஆரம்பித்தார்.

நான் ஆட்டோ ஓட்டுனரிடம், "கை கொடுங்க," என்று சொல்லி, கைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

"அப்பு ஸ்ட்ரீட் போகணும்," என்றேன் நான். "மீட்டருக்கு மேல் இருபது ரூபா," என்று சாருவும் சொன்னார். சரி என்றதும் அமர்ந்தோம்.

"எரநூறு ரூவா கேட்குறான். அதான் கைக் கொடுத்துட்டு வந்தேன், சாரு."

"எப்படி இருக்கானுவ பாருங்க."

"நம்ம ரெண்டு பேருக்கும் கனவான் look இருக்குறதால, அப்படி கேக்குறானுங்க, சாரு. எவ்வளவு கேட்டாலும் தருவாங்கன்னு நம்புறாங்க."

"நம்மல பார்த்தா, மூனா பூனா மாதிரியாவா இருக்கு? நான் இளைஞனா இருந்திருந்தா, அவன் மூக்குலயே குத்தியிருப்பேன்."

(கனவான் தோற்றம் = மூனா பூனா. ROFL )

ஆட்டோ ஓட்டுனர் சொன்னார், "இப்பவும் நீங்க இளைஞன் மாதிரிதான் இருக்கீங்க, சாமி. என்ன தலதான் நரைச்சிருக்கு. அதுவும் இப்ப ஒரு ஸ்டைல்தான்."

"சாரு, இது second time. மிகப் பெரிய reward. நாப்பது வருஷமா உங்க உடம்பை ஆராதிக்கிறேன்ன்னு சொன்னீங்களே. அதுக்கான பலன்."

சாரு தனக்கே உரிய அந்த அழகான சிரிப்பை உதிர்த்தார்.


Thursday, November 3, 2016

Tag Centre சர்ச்சை

TAG சென்டர் நிகழ்வு பற்றி விமர்சகர் வட்டத்தினர் எழுதிய பதிவை நண்பர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.


மாமல்லனும் தொலைபேசியில் அழைத்து என்ன ஆனது எனக் கேட்டார். அது பற்றிய சிறு விளக்கமே இந்தப் பதிவு.


மாதத்தின் கடைசிச் செவ்வாயில் TAG-இல் ஒரு புத்தக விமர்சனக் கூட்டத்தை 'தமிழ் புத்தக நண்பர்கள்' என்ற அமைப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறது. TAG-இல் மொத்த இருக்கைகள் நூற்றைம்பது. 'தமிழ் புத்தக நண்பர்கள்' குழுவில் இருந்து எப்பொழுதும் நூறு பேர் வந்துவிடுகின்றனர் என்று அறிகிறேன்.


அக்டோபர் முதல் வாரமே அழகியசிங்கர் என்னைத் தொடர்புகொண்டு நிகழ்வுக்கு சாரு நிவேதிதாவின் வாசகர்கள் எத்தனை பேர் வருவார்கள் எனக் கேட்டிருந்தார். ஐம்பது பேர் வருவார்கள் எனச் சொல்லியிருந்தேன். அவர் இந்தத் தகவலை 'தமிழ் புத்தக நண்பர்கள்' குழுவின் நிர்வாகிகளிடம் தெரிவித்து, அதற்கேற்ப நூற்றைம்பது பேருக்கு உணவு தயாரிப்பது என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.


விழா அன்று ஐந்து மணிக்கே அந்திமழை, கிழக்கு, உயிர்மை பதிப்பக நண்பர்கள் அரங்கு வாயிலில் புத்தக விற்பனையைத் தொடங்கிவிட்டனர். ஐந்தே காலுக்கு பிரபு காளிதாஸ், சாய் ராஜேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்ட சாரு வாசகர் வட்ட நண்பர்கள் அரங்கிற்கு சென்றுவிட்டனர்.


கூட்டம் நடைபெறுவது முதல் மாடியில். உணவு இரண்டாம் மாடியில். நான் ஐந்தரைக்குச் சென்றேன். பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களில் நடைபெறுவது போல், கீழ்த்தளத்தில், ஒரு நோட்டு புத்தகத்தில் புதிதாக வருபவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரிகளை வாங்கிக் கொண்டார்கள். நண்பர்களுடன் சென்று இரண்டாம் மாடியில் வழங்கப்பட்ட சிற்றுண்டியை அருந்திவிட்டு, முதல் தளத்திற்கு வந்தோம். விழா மிகச் சரியாக 6:29-க்கு ஆரம்பமானது. சாரு நிவேதிதா 6:25-க்கு முதல் தளத்திற்கு வந்தார்.


சுமார் ஆறு மணி வாக்கில், புகைப்பட நிபுணர் பிரபு ராமகிருஷ்ணன் முதல் தளத்திற்குள் கோபமாக நுழைந்தார். தன்னை உள்ளே விடவில்லை எனவும் விழா அமைப்பாளர்கள் தன்னிடம் மரியாதைக் குறைவாகப் பேசினர் என்றும் என்னிடம் முறையிட்டார். நானும் முத்துக்குமாரும் கீழே சென்றோம். பிரபு ராமகிருஷ்ணன் சொன்னது போல் யாரும் எங்களை எதுவும் கேட்கவில்லை. சரி, பார்கிங்-இல் ஏதேனும் பிரச்சினை என்று வெளியே சென்று பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்தோம். TAG சாரியும் அவரது உதவியாளரும் நோட்டு புத்தகம் இருந்த இடத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள். சாரியின் உதவியாளர், உங்களிடம் அழைப்பிதழ் உள்ளதா எனக் கேட்டார். ஏற்கனவே, நோட்டில் பதிவுசெய்துவிட்டோம் என்று சொன்னேன். "அது முக்கியமில்லை, உங்களுக்கு இந்த நிகழ்வு பற்றி எப்படித் தெரியும்?" எனக் கேட்டார். "நாங்கள் சாரு நிவேதிதாவின் வாசகர்கள் மற்றும் நண்பர்கள்; சாருவின் வலைப்பதிவைப் பார்த்து நாங்கள் வந்துள்ளோம்," என்றேன். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

என்னதான் பிரச்சினை என்று பொறுமையாகக் கேட்டேன். "எங்கள் உறுப்பினர்களுக்கு உணவு போதவில்லை," என்ற உண்மையை சாரியின் உதவியாளர் கக்கினார்.


"We have come all the way to listen to Charu's speech and not for the food. Food is immaterial to us. We feel insulted," என்று கோபமாக சாரியிடம் கத்தினேன். உணவுதான் பிரச்சினை என்றால், இனி வரும் வாசகர்கள் அனைவரையும் முதல் தளத்திற்கு அனுப்புங்கள்; இரண்டாம் தளத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று கோரினேன். அவர் என்னை சமாதானப்படுத்தி, இனி வரும் வாசகர்கள் அனைவரையும் முதல் தளத்திற்கு அனுமதிப்பதாக உறுதியளித்தார்.


பிரபு ராமகிருஷ்ணனிடம் முத்துக்குமார் விஷயத்தைச் சொல்லி அவரைச் சமாதானப் படுத்தினார். 6:25-க்கு முதல் தளத்திற்கு வந்த சாரு நிவேதிதாவுக்கு இது எதுவும் தெரியாது. He was ignorant to all these nonsense. விழா ஆரம்பமாவாதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன் சாரி சாருவிடம், "உங்கள் blog-இல் நீங்கள் இந்த நிகழ்வு பற்றி எழுதியிருக்கக் கூடாது; எங்கள் உறுப்பினர்களுக்கு உணவு போதவில்லை," என்று சொல்லியிருக்கிறார்.


அரங்கு நிறைந்த கூட்டம். Extra chairs போட்டார்கள். ரவி தமிழ்வாணன் மேடையிலேயே, இவ்வளவு இளைஞர்கள் இங்குக் கூடி நான் பார்த்ததில்லை எனக் கூறினார். இந்த மகிழ்ச்சியான சூழலைக் கெடுக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால்தான் தான் அவமானப் படுத்தப் பட்டாலும், இது குறித்து சாரு நிவேதிதா தன் உரையில் எதுவும் சொல்லவில்லை.


எட்டு மணிக்குக் கூட்டம் முடிந்ததும், புத்தகங்களில் கையெழுத்து போட்டுவிட்டு, 8:15-க்கெல்லாம் சாரு நிவேதிதா கிளம்பிவிட்டார்.


அடுத்த நாள் காலை, ஸ்ருதி டிவி கபிலன் தொலைபேசியில் பேசினார். முதல் நாள் மாலை ஆறரைக்கு அவர் வந்த பொழுது Gate பூட்டியிருந்ததாகவும் சுமார் முப்பது பேரை உள்ளே விடவில்லை என்றும் கூறினார். கபிலன் பெரும் சண்டை போட்டு, மேலே வந்துள்ளார்.


சாரி எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளார். முதல் நாள் மாலை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சாரு நிவேதிதாவிடம் விலாவரியாகத் தொலைபேசியில் கூறினேன். தன்னையும் சாரி அவமானப்படுத்தியதாக சாரு நிவேதிதா கூறினார். தான் அவமானப்படுத்தப்பட்டபோது தாங்கிக்கொண்ட அவர், தன் நண்பர்கள் அவமானப்படுத்தப் பட்டதை அறிந்து மனம் வெம்பினார். அன்று மாலையே காட்டமாக ஒரு பதிவு போட்டார். அதுதான் மேலே உள்ள பதிவு.


மேலும், பிரபு ராமகிருஷ்ணன் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி தன் நண்பர்கள் குழுவில் பதிவிடுகிறார். அதை நண்பர் ஒருவர் சாரு நிவேதிதாவுக்கு அனுப்பி வைக்கிறார். மேலே உள்ள பதிவில் அந்தக் கடிதம் உள்ளது.


சரி, சாரு நிவேதிதா தன் வலைத்தளத்தில் இந்த நிகழ்வு பற்றி எழுதியது தவறா என்று கேட்டால், எஸ். ராமகிருஷ்ணன் ஃபெப்ருவரி 2016-இல் எழுதிய பதிவைப் பார்க்கவும். 

http://www.sramakrishnan.com/?p=5216

எஸ்.ராமகிருஷ்ணன்:

ஃபெப்ருவரி 23ம் தேதி மாலை  5:45 மணிக்கு எனது சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெற உள்ளது.


Date:   Tuesday, 23rd February 2016


Time:   5.45 p.m. to 8.15 p.m.


Venue: Tag Centre, New No. 69, T.T.K.Rd., Alwarpet, (Opp. Narada Gana Sabha), Chennai 600018


Book of the Month:   `Sancharam` by S. Ramakrishnan


Reviewer:   Smt. Chithra Balasubramanian


Programme:


5.45 p.m. to 6.30 p.m.  High Tea


6.30 p.m. to 6.45 p.m.  Prayer song followed by Welcome by Ravi Tamizhvanan


6.45 p.m. to 6.50 p.m.   Presentation of the `Best Reviewer Award` for 2015 to Smt. Kanthalakshmi Chandramouli by Shri N. Goplaswami, former Chief Election Commissioner


6.50 p.m. to 7.05 p.m.  Felicitation talk by Shri N. Gopalaswami


7.05 p.m. to 7.35 p.m.  Review of the book `Sancharam` by Smt Chithra Balasubramanian


7.35 p.m. to 8.05 p.m.  Author`s response followed by answers to selected


Questions from the audience by the author Shri S. Ramakrishnan


8.05 p.m.          Vote of thanks by Charukesi


***


இருநூறு பேர் வந்துவிட்டார்கள் என்றால், விழா அமைப்பாளர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? வாசகர்களை இரண்டாம் தளத்திற்கு அனுப்பாமல், முதல் தளத்திற்கு மட்டும் அனுமதித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வாசகர்களிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது.


பின்குறிப்பு:


மொத்தம் நூற்றைம்பது பேருக்கான உணவு தயார் செய்யப்பட்டது. அதையும் தாண்டி வாசகர்கள் வந்தால், விழா அமைப்பாளர்கள் இப்படி இங்கீதம் இன்றி நடந்து கொள்ளலாமா? முதல் தளத்திற்கு மட்டும் வாசகர்களை அனுமதித்து இருக்கலாமே? சாரியின் தொனி எங்களை மிகவும் எரிச்சலூட்டியது. ஒரு வாதத்திற்கு, யாரையும் உள்ளே விடாமல் இருந்தால் கூட, அதைச் சொல்வதற்கு ஒரு முறை இருக்கிறது அல்லவா? அதுதான் இங்கே பிரச்சினை.


***

Tuesday, May 10, 2016

ஒரு பார்வையில் சென்னை நகரம் - மதிப்புரை

ஒரு பார்வையில் சென்னை நகரம் - கட்டுரைகள் - அசோகமித்திரன் - கவிதா பதிப்பகம். முதல் பதிப்பு 2002, மூன்றாம் பதிப்பு: 2015



சென்னையின் ஒவ்வொரு ஏரியா (அசோகமித்திரன் மொழியில் 'பேட்டை') பற்றியும் தனக்குள்ள தொடர்பு பற்றி அசோகமித்திரன் இந்த நூலில் எழுதியுள்ளார். அசோகமித்திரன் தி.நகர் வாசி.

தியாகராய நகர், மாம்பலம், மவுன்ட் ரோட், வேளச்சேரி, அம்பத்தூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன், என ஒவ்வொரு பகுதி பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். அம்பத்தூர் பற்றி, அதன் நிறைய 'நகர்'கள் பற்றி, தெருக்களின் பெயர்கள் பற்றியெல்லாம் படிக்கும்போது, இவர் இந்த இடங்களில் எல்லாம்கூட சுற்றியிருக்கிறாரே என ஆச்சரியமாக உள்ளது.

இந்நூலில் காணும் சில வரலாற்றுத் துணுக்குகளும் ஏற்கனேவே அறிந்தவையாக இருந்தன. ஆனால், இந்தப் புத்தகத்தை ஒரு எழுத்தாளன் அவன் வாழும் நகரத்தின்மேல் கொண்ட பிரியத்தின்பால் எழுதிய பிரதி என்றுதான் கொள்ளவேண்டுமே தவிர, எஸ்.முத்தையாவின் Madras Rediscovered போன்று அரிய வரலாற்றுத் தகவல்கள் கொண்ட புத்தகமாக எதிர்பார்க்கக் கூடாது. மேலும் வரலாற்றை எழுதுவது ஒரு எழுத்தாளனின் வேலை அன்று.

அந்தக்கால திருவல்லிக்கேணி மெஸ்கள் எப்படி புது வாடிக்கையாளர்களைத் 'தேர்ந்தெடுப்பார்கள்' என்று அசோகமித்திரன் சுவாரசியமாக கூறியுள்ளார். புது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் திருவல்லிக்கேணி மேன்சன்களில் தங்கி பிரெசிடென்சி அல்லது மெட்ராஸ் பல்கலை.யில் பயிலும் மாணவர்கள். அவர்கள் ஏப்பம் விடுகிறார்களா, மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல் சாப்பிடுகிறார்களா என மூன்று நாட்கள் பார்த்த பிறகே, மெஸ் உரிமையாளர்கள் அவர்களுக்கு வார / மாத டோக்கன் தருகிறார்கள்.

அசோகமித்திரன் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் இந்நூல் உதவும். வீட்டின் நெருக்கடியில் உட்கார்ந்து எழுத முடியாமல், ஒரு நண்பரின் அறிவுரையின் பேரில், அசோகமித்திரன் தி.நகர் அகஸ்தியர் கோயிலுக்கு சென்று எழுத முயற்சிக்கிறார். அங்கும் இவருக்குச் சூழல் சரியாக இல்லாததால், வீடு திரும்பும் வழியில் நடேசன் பூங்காவில் உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கிறார். பதினைந்து ஆண்டுகள் அங்குதான் எழுதியதாகக் கூறுகிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னும்கூட மெட்ராஸில் பெருமழை பெய்து, நகரம் வெள்ளக் காடாக இருந்தது என்று அசோகமித்திரன் கூறும்போது, நாமும் நம் ஆட்சியாளர்களும் இந்த நகரத்தை என்றுமே சரியாகப் பேணவில்லை என்ற எண்ணம் மேலிடுகிறது.

புத்தகத்தைப் படித்து முடிக்கும் முன்னே, முன்னட்டை பிரியத் தொடங்கிவிட்டது. கவிதா பதிப்பகம் புத்தகத்தை இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துப் பதிப்பிக்க வேண்டும்.

இணையம் மூலம் வாங்க: Wecanshopping

Thursday, May 5, 2016

எக்ஸைலும் மாமரமும்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தேன். ஸ்தல விருட்சம் மாமரம். அதன் வயது 3500 வருடங்கள். இருபது வருடங்கள் முன் அது பட்டுப்போக ஆரம்பித்ததால், அந்த மரத்திலிருந்து திசு எடுத்து Genetic Engineering மூலம் இன்னொரு மாமரத்தை உருவாக்கி உள்ளனர். அது இப்போதைய ஸ்தல விருட்சம். பழைய மாமரத்தை நான்கு அடி வெட்டி, இப்போது கண்ணாடிப் பேழையில் பாதுகாத்து வருகின்றனர்.

ஐந்து நிமிடம் நின்று அந்த 3500 வருட மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எக்ஸைல் படிக்காமல் இருந்தால், ஒரு நொடி பார்த்துவிட்டு நகர்ந்திருப்பேன். எக்ஸைல் படித்ததால், 3500 வயது உள்ள என் பாட்டியைப் பார்ப்பது போல் இருந்தது. என் பாட்டி 3500 வருடங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தால் எப்படி இருக்கும்! அவளை எவ்வளவு வாஞ்சையோடு பார்ப்பேனோ, அப்படி பார்த்துக்கொண்டிருந்தேன் அந்த மரத்தை.

சாரு நிவேதிதா இதே விசயத்தை வேறு வார்த்தைகளில் எழுதியபோது, அவர் ஞானி; ஞானிகளால்தான் மரத்துடன் பேச முடியும் என்ற எண்ணிக்கொண்டு இருந்தேன். மூச்சு முட்டும் நவீன வாழ்வில் உழலும் ஒரு சராசரி மனிதனுக்கும் இதே எண்ண அலைவரிசையைத் தருகிறது எக்ஸைல்.

எங்கே உன் கடவுள்? - தலைப்பு காமெடி

சாரு ஒரு நாள் ஃபோன் பண்ணி துக்ளக் கட்டுரைத் தொகுப்புக்கு தலைப்பு சொல்லுங்கன்னு சொன்னார். நான் அப்ப துக்ளக் கட்டுரைகள் படிக்கல. "எதைப் பத்தின புக் சாரு,"ன்னு கேட்டதுக்கு, "நிலம், நீர், காற்று, அரசியல், சமூகம் பத்தின புக்கு,"ன்னு சொன்னார். அப்ப திருநெல்வேலில இருந்து சங்கரன் கோயில் போயிட்டு இருந்தேன். போற வழியெல்லாம் யோசிச்சு, அப்புறம் சாருவுக்கு ஃபோன் பண்ணி, மூணு நாலு தலைப்பு சொன்னேன். 'ஒஸோன் ஓட்டை வழியே', 'பூமித் தாய்', 'என் தாய்' - இந்தத் தலைப்பக் கேட்டுட்டு சாரு சொன்னார்: "ஸ்ரீராம், விகடன்லாம் படிக்காதீங்க. இதெல்லாம் வைரமுத்து புக் பேரு மாதிரி இருக்கு. நான் சங்கப் பாடல்ல இருந்து தலைப்பு வெச்சுக்குறேன்"

அப்புறம், எங்கே உன் கடவுள்ன்னு தலைப்பு வெச்சவர் பத்ரி.

விகடன் படிச்சு மூணு வருஷம் ஆச்சுன்னு நான் சாருகிட்ட சொல்லல. இந்தக் கதையை எழுதத் தூண்டிய பிச்சைக்கு நன்றி.

Thursday, April 21, 2016

குறைந்த ஒளியில் - விமர்சனம்

குறைந்த ஒளியில் - குறுங்கட்டுரைகள் - பிரபு காளிதாஸ், உயிர்மை வெளியீடு, முதல் பதிப்பு - 2016



பிரபு காளிதாஸின் முகநூல் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். டாம் அண்ட் ஜெர்ரியில், இவர் ஜெர்ரி. டாம், என்ன கேமரா வைத்திருகிறாய் எனக் கேட்கும் 'நண்பர்கள்', பண பாக்கி வைக்கும் வாடிக்கையாளர்கள், கல்யாணத் தரகு இணையதளங்கள், என எண்ணற்ற மனிதர்கள். தான் அடிவாங்கியதை சுவாரசியமாக, பகடி கலந்து சொல்லியிருக்கிறார்.

சில கட்டுரைகள் சிறுகதைகளாக வந்திருக்க வேண்டியவை. 'ராணி பேரடைஸ்', 'சொம்மா', 'சிலோன் பரோட்டாவும் முட்டைக் கறியும்', 'பாட்டு மட்டும் எங்கேர்ந்து வருது', 'பேச வேண்டும்', 'ங்கொப்பன் வூட்டு வண்டியாடா?', 'இருபது பர்சண்ட் குடுகன்னும்மா..' ஆகிய கட்டுரைகளில் சிறுகதைக்கான கணங்கள் இருந்தன. இவற்றை, கொஞ்சம் விரிவாக்கி, செறிவாக்கி எழுதினால், நல்ல சிறுகதைகளாக உருமாறும்.

'என்ன நடக்கிறது குழந்தைகளுக்கு', 'சாகும் வரை விடமாடார்கள்' ஆகியவை நல்ல கட்டுரைகள்.

சில கட்டுரைகள் படிக்க படிக்க சிரிப்பு. உதாரணம்: 'ங்கொப்பன் வூட்டு வண்டியாடா?', 'பீஸ்', 'போலீஸ் நாய்', 'நம்பிக்கை இல்லையா?'

'உயிரில் கலந்த எழுத்து' கட்டுரையின் மொழி நன்றாக இருந்தது.

'முடியுமா?' என்று பத்து வரிகளில் அருமையான சிறுகதை ஒன்று உள்ளது.

'வெளித்தோற்றம்' கட்டுரையில் மேல்தட்டு மனிதர்கள் பற்றிய பிரபுவின் விமர்சனம் சரி. ஆனால் அதை இன்னும் முதிர்ச்சியுடன் எழுதியிருக்க வேண்டும். பணக்காரன் கெட்டவன், ஏழை நல்லவன், எனப் பொருள்படும்படி அந்தக் கட்டுரை உள்ளது. ஆனால், பிரபு அப்படி நினைப்பவர் இல்லை. இந்தப் பிரச்சனையை 'கிடைச்சா வாங்கித் தர்றோம்', 'என்னடா வேணும்?' கட்டுரைகளில் முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார்.

'பிஹாரிகள்' கட்டுரை இந்தத் தொகுப்பில் தேவையில்லாதது. வெறும் தகவல் மட்டுமே உள்ளது. ஒரு கட்டுரையில் ஒரு முற்றுபெற்ற தன்மை இருக்கவேண்டும். அது மற்ற கட்டுரைகளில் உள்ளது. இன்னும் விரிவாக்கி எழுதப்படவேண்டிய கட்டுரை அது.

'கிழியும் தருணம்' கட்டுரையிலும் ஒன்றுமே இல்லை. கட்டுரைக்கான கணங்களோ, சிறுகதைக்கான கணங்களோ இல்லாத குறிப்பு அது. தொகுப்பில் பிடிக்காத இரண்டாவது கட்டுரை இது.

மூன்று கட்டுரைகளில் சாருவின் உத்தியான ஒரே வார்த்தையை தொடர்ச்சியாக அரைப் பக்கத்துக்கு எழுதுவதை பிரபு கையாண்டிருக்கிறார். இரண்டு கட்டுரைகளில் அது பொருந்துகிறது. ஒரு கட்டுரையில் 'ஓடி, ஓடி...' என தொடர்ச்சியாக வருகிறது. அது பொருந்தவில்லை. சாருவின் எழுத்தின் பாதிப்பில் எழுதுவது வேறு. சாருவை நகல் எடுப்பது வேறு. அந்த ஓரிடத்தில் மட்டும், பிரபு சாருவை நகலெடுப்பதாகத் தோன்றியது.

அடுத்தப் பதிப்ப்பில் Index-உம், கட்டுரை வெளியான தேதியும், குறிப்புகளுக்கான கடைசி இரண்டு பக்கங்களும் இடம் பெற வேண்டும்.

பிரபு, தன் அடுத்த புத்தகத்தை வேண்டுமானால் குறுங்கட்டுரைகள் தொகுப்பாகப் போடலாம். அதற்கு அடுத்த புத்தகங்கள் இன்னும் விரிவாக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்புகளாகவும், சிறுகதைகளாகவும் இருக்க வேண்டும் என அன்புக் கோரிக்கை வைக்கிறேன்.

இணையம் மூலம் வாங்க: bit.ly/1Sdf2i3

Thursday, April 14, 2016

க.நா.சு.வின் 'ஆட்கொல்லி' - மதிப்புரை

ஆட்கொல்லி - நாவல் - க.நா.சுப்ரமண்யம், முதல் பதிப்பு: 1956; தற்போதைய பதிப்பு: 2014, விருட்சம் வெளியீடு.


                                                                 க.நா.சு.

பணக்காரன் தன் உற்றார் உறவினரை மதிப்பதில்லை. உற்றார் உறவினரும் இதன் காரணமாக அவனிடம் விலகியே உள்ளனர். எனவே, பணம் ஒரு ஆட்கொல்லி என்கிறார் க.நா.சுப்ரமண்யம்.

ராஜா, தன் பள்ளிக் காலத்தில் சில வருடங்கள் அவன் மாமா வேங்கடாசலம் வீட்டில் தங்கிப் படிக்கிறான். மாமா அரசுப் பள்ளி ஆசிரியர். மாதம் தொண்ணூற்றி மூணே முக்கால் ரூபாய் சம்பளம். ஆனால், குறுகிய காலத்திலேயே வேங்கடாசலம் லட்சாதிபதி ஆகிவிடுகிறார். ராஜாவுக்கு இது எப்படி என்றே புரியவில்லை. வெகுநாட்கள் கழித்துத்தான் ராஜாவுக்கு தெரிகிறது, வேங்கடாசலம் வட்டிக்குப் பணம் கொடுப்பதை உபதொழிலாகக் கொண்டுள்ளார், என்று.

கடனைத் திருப்பித் தர முடியாதவர்களிடம் இருந்து நிலம், வீடு முதலியவற்றை அபகரிக்கிறார் வேங்கடாசலம். இதெல்லாம் பாபம் இல்லையா மாமி என்று ராஜா, தன் அத்தை ஜானகியிடம் கேட்கிறான். அதற்கு ஜானகி, நாம் ஒன்றும் அடுத்தவர் சொத்தைப் பிடுங்கிக்கொள்ளவில்லை; நமக்கு வர வேண்டியதைத்தான் வாங்கிக்கொள்கிறோம்; அடுத்தவர் காசு ஒரு ருபாய்கூட நமக்கு வேண்டாம்; அதே நேரம் நம் காசு ஒரு ருபாயைக்கூட அடுத்தவரிடம் ஏமாறக்கூடாது, என்கிறாள்.

மேலோட்டமாகப் பார்த்தால், அவள் சொல்வது சரி என்று தோன்றும். ஆனால், வட்டிக்குப் பணம் தருவதே பாபம் இல்லையா என்று கேட்கிறார் க.நா.சு.

வறுமையில் இருக்கும் தன் தங்கை உதவி கேட்டு வந்தபோதுகூட அவளுக்கு உதவாமல், திரும்பி அனுப்பிவிடுகிறார் வேங்கடாச்சலம்.

ராஜா இரண்டு வருடங்கள் தன் மாமா வீட்டில் தங்கிப் படித்ததற்கு, ராஜாவின் அப்பாவிடம்  ஐநூறு ரூபாய் கேட்கிறார் வேங்கடாச்சலம். சாப்பாடு, தங்க இடம் கொடுத்தது ஆகிவற்றுக்கு அவர் காசு கேட்கவில்லை. வெளியில் போனால், சிறுவனுக்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவது, பேனா பென்சில் வாங்கித் தந்தது முதலிய செலவுகளை ஒவ்வொன்றாய் கணக்கு புத்தகத்தில் எழுதி, கணக்கு காண்பிக்கிறார் வேங்கடாசலம். மருமகனுக்கு செலவு செய்ததற்கு கணக்கு பார்ப்பதா என்று, காசு தர மறுக்கிறார் ராஜாவின் அப்பா.

மாமா வீட்டில் தினசரி உணவு - ரசம், வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம். ஒரு நாள் என்றால் பரவாயில்லை. வருடம் முழுவதும் இதுவேதான். இந்த உணவு பத்தாமல், உணவு விடுதிகளில் சாப்பிடுகிறான் ராஜா. முக்கியமான விஷயம், மாமா - மாமிக்கும் இதே உணவுதான்.

வேங்கடாச்சலம்-ஜானகி தம்பதியை முழுக்கவும் கெட்டவர்களாக க.நா.சு. காட்டவில்லை. கறுப்பு - வெள்ளைக்கு நடுவில் சாம்பல் நிறத்தில் அவர்களை சித்தரித்துள்ளார் க.நா.சு. இதுவே, இந்நாவலின் பலம்.

பணம் பற்றி ராஜா கூறும் வியாக்கியானங்கள் சத்தியமானவை. பாவ்லோ கொய்லோ நாவல்களில்தான் இப்படி தத்துவம் நிறையவும் கதை கம்மியாகவும் இருக்கும். நாம் படிப்பது அபுனைவா, இல்லை புனைவா என்று சந்தேகம் வரும். ஆனால், படிக்க சுவாரசியாமாக இருக்கும். உதாரணம்: எலெவன் மினிட்ஸ், தி அல்கெமிஸ்ட். பழுப்பு நிறப் பக்கங்களில், க.நா.சு.வை சாரு நிவேதிதா பாவ்லோ கொய்லோவுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

ஒரு சோகக்கதையில் அழுகை வரவைப்பது இலக்கியம் அல்ல, அனுதாபம் தருவிப்பதுதான் இலக்கியம்; இது ஒரு சில ஜாம்பவான்களுக்கே கைகூடியது, என்று முன்னுரையில் சொல்கிறார் க,நா.சு.

சாரு நிவேதிதாவின் ராஸ லீலா, கண்ணாயிரம் பெருமாள் என்ற குமாஸ்தா அஞ்சல் துறையில் படும் இன்னல்களையும் காமமே இல்லாத அவனது பாலியல் வறட்சியையும்தான் பேசுகிறது. முழுக்க சோகம். ஆனால், ஒவ்வொரு பக்கமும் பகடி. படிக்க படிக்க இன்பம். க.நா.சு., ராஸ லீலாவைப் படித்திருந்தால், சாரு நிவேதிதாவை ஜாம்பாவான்கள் பட்டியலில் சேர்த்திருப்பார்.

***

இணையம் மூலம் வாங்க: 'Wecanshopping' குஹனை, தொலைப்பேசி / வாட்ஸ்-அப் – +91 90032 67399 / 9940448599 மூலம் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாங்கலாம்.

விருட்சம் முகவரி:

நவீன விருட்சம், புதிய எண் 16, ராகவன் காலனி Flat F3, Seethalakshmi Apartments, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

Wednesday, April 6, 2016

மனம் கொத்திப் பறவை - மதிப்புரை


சாருவின் அனைத்துக் கட்டுரைத் தொகுப்புகளுக்கும் 'வாழ்வது எப்படி? - 1, 2, 3...' என்று பெயர் வைக்கலாம். நம் வசதிக்காகத்தான் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறார். கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள பெங்களூரு செல்கிறார் சாரு. இவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறையில் வேறு ஒருவர், அறையை காலி செய்துகொண்டிருக்கிறார். அந்த ஐந்து நிமிடத்தில் அந்த நபர், சாருவிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுத் தள்ளுகிறார். நாம் இன்னொருவருடன் எப்படி உரையாடுவது என்றே தெரியாமல் இருக்கிறோம்.

இந்தத் தொகுப்பின் ஆரம்பக் கட்டுரைகளில் நமக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத கோலா பூஃப் பற்றியும் ஹௌபாரா என்ற அறியவகைப் பறவை பற்றியும் சாரு நிவேதிதா எழுதுகிறார்.


ஏன் என்று யோசித்ததில், இது ஒரு உத்தி என புரிந்தது. இந்தப் பெயர்களை முதலில் காட்டி, வெகுஜன இதழ் மட்டுமே படிக்கும் ஒரு வாசகனை உள்ளே இழுக்கிறார் சாரு நிவேதிதா. ஹௌபாரா பற்றிக் குறிப்பிட்டு, அதே கட்டுரையில் ஹேமலட்டில் இருந்து இந்த வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.


"There is special providence in the fall of a sparrow. If it be now it is not to come; if it be not to come, it will be now; if it be not now, yet it will come - the readiness is all."


ஆங்கிலத்தில் இதன் சாரத்தை முழுவதும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே கட்டுரையில் இந்த வரிகளை மிக அருமையாக சாரு மொழிபெயர்த்திருக்கிறார்.


“இப்போது நடக்கும் என்றால், அது நடக்காமல் போகலாம்; நடக்காது என்றால், நடந்தாலும் நடந்துவிடலாம்; இப்போது நடக்கவே நடக்காது என்றால் அது நடந்தே தீரும். எல்லாம் நடப்பவற்றை எதிர்கொள்ளும் ஆயத்தத்தில்தான் இருக்கிறது. எப்படி பிதாவின் சித்தம் இல்லாமல் ஒரு சிட்டுக்குருவி தரையிலே விழாதோ, அதுபோலவே நம்முடைய உயிர் போவதும் போகாமல் இருப்பதும் இறைவனின் கையில்தான் இருக்கிறது!”

இந்தத் தொகுப்பில் வெளிப்பட்டிருக்கும் சாருவின் கோபம் பரிசுத்தமானது (innate) மற்றும் நியாயமானது (justified). ஹைதராபாத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடுவது பற்றிய பயிற்சி ஒன்று நடக்கிறது. காவலரின் கவனக்குறைவால், தோட்டா நிரப்பிய துப்பாக்கி, பயிற்ச்சியில் பயன்படுத்தப் படுகிறது. இதில் இரண்டு மாணவர்கள் இறக்கிறார்கள். அதிகம் போனால், இந்தக் காவலரை இடைநீக்கம் செய்வார்கள். இதுவே ஒரு ஐரோப்ப தேசத்தில் நடந்திருந்தால் கலவரம் வெடித்திருக்கும்; இங்கு இது மற்றும் ஒரு செய்தி, அவ்வளவுதான், எனக் கோபப்படுகிறார் சாரு. மேலும், தான் கலவரத்தை நியாயப் படுத்தவில்லை; தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் சாரு. இதற்கு மேல்தான் விஷயமே.


சாருவின் கோபம் innate என்று சொன்னேன் அல்லவா. இந்த வரிகளைப் படியுங்கள்.


"மாணவர்கள் ஏன் துப்பாக்கிபற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? துப்பாக்கி என்பது மனித உயிர்களைக் கொல்வதற்காக மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொலைக் கருவி; மனித நாகரிகத்தின் அவலங்களில் ஒன்று. துப்பாக்கியே இல்லாத சமூகம் உருவாவதைப்பற்றி அல்லவா மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்? அன்பையும் பண்பையும் போதிக்க மறந்துவிட்ட நாம், நம் குழந்தைகளுக்கு இவ்வாறாக வன்முறையைப் போதித்துக்கொண்டு இருக்கிறோம்."


சாருவின் உலகம் தனி. நம் உலகின் அசிங்கங்கள் அவருக்கு அந்நியமானவை. அவர் ஆன்மா பரிசுத்தமானது. அதுவே அவர் எழுத்திலும் வெளிப்படுகிறது.


***

மனம் கொத்திப் பறவை - முதல் பதிப்பு, 2010 - விகடன். இரண்டாம் பதிப்ப்பு, 2016 - உயிர்மை. 

இணையம் மூலம் வாங்க: http://bit.ly/1TJIDzN

Thursday, March 24, 2016

இச்சைகளின் இருள்வெளி - விமர்சனம்

இச்சைகளின் இருள்வெளி: சாரு நிவேதிதா, நளினி ஜமீலா - ஓர் உரையாடல்.


இது பாலியல் கிளர்ச்சி ஊட்டும் புத்தகம் இல்லை. சமூகம் பேசத் தயங்குகின்ற, taboos என்று நினைக்கிற விசயங்களைப் பற்றியும் ஆண் - பெண் உறவின் சிடுக்குகள், சிக்கல்கள் பற்றியும் இந்நூலில் சாரு நிவேதிதாவும் நளினி ஜமீலாவும் விலாவரியாகப் பேசுகிறார்கள்.

பெண்கள் கோருவது சுதந்திரம் அல்ல, சமத்துவம் என்று ஓரிடத்தில் சொல்கிறார் நளினி ஜமீலா. சாரு நிவேதிதாவும் நளினி ஜமீலாவும் இந்த புத்தகத்தின் பக்கங்களை சரிசமமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள். இருவருக்கும் இடையில் நான் உசத்தி, நீ உசத்தி என்ற எந்த எண்ணமும் இல்லை.

முதலிரவில் முன்பின் தெரியாத ஆணுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள பெண்ணை அனுப்புவது குடும்பமே சேர்ந்து செய்யும் வன்கலவி என்று ஓரிடத்தில் சொல்கிறார் ஜமீலா.

நாம் சினிமாவில் என்ன பார்ப்போம்? பாலியல் தொழிலாளியை கதாநாயகன் காதலித்து, அவளை மீட்பான்; அவள் வாழ்க்கை அதன்பின் வசந்தமாகும். ஆனால், நிதர்சனத்தில் அப்படி இல்லை. அவளுக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டு, அவன் பெரும்பாலும் ஓடிவிடுகிறான். அந்த குழந்தையும் வளர்ந்து பாலியல் தொழிலாளி ஆகுகிறாள். இவ்வாறு, நம் பொதுபுத்தியில் பதிந்திருக்கும் பல விசயங்களை கட்டுடைக்கிறார்கள் இருவரும்,

நம் சமூகம் எப்படி உள்ளது என்று சாரு நிவேதிதா ஓரிடத்தில் கூறுகிறார்:

"பணமில்லாமல் மனிதன் வாழவே முடியாது என்பது போல் ஆகிவிட்டது. கன்ஸ்யூமர் கலாச்சாரம் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு ஆடம்பர மோகம் அதிகமாகிவிட்டது. வாழ்வின் ஜீவாதாரமான மதிப்பீடுகளையும் அறவுணர்வையும் தூக்கியெரிந்துவிட்டு மனிதர்கள் மிகக் கேவலாமான சினிமாப் பாணி வாழ்க்கையைக் காப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தேவையாயிருக்கும் பணத்துக்காக எதையும் செய்வதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டுவிட்டது சமூகம்." (பக்கம் 47)

சில விசயங்களில் இருவரும் ஒத்துப்போகிறார்கள். சில விசயங்களில் முரண்படுகிறார்கள். தீர்வை வாசகனுக்கே விட்டுவிடுகிறார்கள்.

பாலியல் தொழில் முறையாக்கப்பட வேண்டும்; வெளிநாடுகள் போன்று செக்ஸ் கிளப்புகள் நம் நாட்டிலும் வேண்டும் என்று இருவருமே சொல்கிறார்கள். அதற்கான காரணங்களை விலாவரியாகப் பேசுகிறார்கள்.

பாலியல் கல்வி வேண்டும் என்று ஜமீலா சொல்கிறார். வேண்டாம் என்று சாரு சொல்கிறார். நம் சமூகம் முதலில் அனைவருக்கும் கல்வியை ஒழுங்காகக் கொடுக்கட்டும்; பின்னர் பாலியல் கல்வி பற்றி பேசலாம். மேலும், பாலியல் கல்வி வேண்டும் என்று சொல்பவர்கள் உயர் வர்கத்தினராகவும், பிராமணர்களாகவுமே இருகிறார்கள். தங்கள் பிள்ளைகள் பள்ளி கல்லூரிகளில் கெட்டுப்போய்விடக் கூடாது என்று பயப்படுகிற ஆட்கள்தான் பாலியல் கல்வி வேண்டும் என்கிறார்கள். அந்த காலத்து 'chastity belt' போல அவர்கள் பாலியல் கல்வியை நினைக்கிறார்கள் என்று சாரு சொல்கிறார்.

இருவரும் பல சுவையான விசயங்களை இப்புத்தகத்தில் கூறுகின்றனர். ஜமீலா கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் போராளி அஜிதா பேசினாராம். கணவன் மனைவியை அடிக்கக்கூடாது என்று அஜிதா பேசியுள்ளார். அப்பொழுது, கூட்டத்தில் அமர்ந்திருந்த அஜிதாவின் மகள் எழுந்து, அம்மாக்கள் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று சொன்னாராம்.

நீங்கள் ஓரினச்சேர்க்கையாளரா என ஜமீலா சாருவைக் கேட்கிறார். அதற்கு சாரு சொல்லும் பதில் காவியம். படித்துப் பாருங்கள்.

இணையம் மூலம் வாங்க: http://www.nhm.in/shop/1000000025315.html

பின்குறிப்பு:

இந்நூலின் முதல் பதிப்பு 'பாலியல் - சாரு நிவேதிதா, நளினி ஜமீலா - ஓர் உரையாடல்' என்ற தலைப்பில் ஜனவரி 2008-இல் தென்திசைப் பதிப்பகம் வெளியிட்டது. இரண்டாம் பதிப்பு ஃபெப்ருவரி 2016-இல் உயிர்மை பதிப்பகம் 'இச்சைகளின் இருள்வெளி' என்ற தலைப்பில் வெளியிட்டது.

Tuesday, March 15, 2016

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழா - அரங்கு Installation பற்றி

வடிவமைத்தவர்: ஓவியர் ஸ்ரீனிவாசன்; சாருவின் புகைப்படம்: பிரபு காளிதாஸ்

(குறிப்பு - படத்தை click செய்து, முழுத்திரையில் பார்க்கவும்)

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஓவியர் ஸ்ரீனிவாசன் வடிவமைத்தது இந்த installation. மின்னஞ்சலில் அவர் அனுப்பியபோழுதே, பார்த்தவுடன் பிடித்துவிட்டது. வலது பக்கம் இருக்கும் floral designs யோனியின் வடிவம் போல் இருந்தது.

சாருவின் புகைப்படம் தலைகீழாக இருந்தது சாருவின் rebellious தன்மைக்கு பொருத்தமாக இருந்தது.

கீழே இடது மூலையில் ஒரு square இருந்தது. எதற்கு தனியாக இப்படி square வைத்திருக்கிறார், எதற்கு படத்தின் கீழே சாரு நிவேதிதா என்ற பெயர் வருகிறது என்றும் புரியவில்லை.

சாருவுக்கும் இந்த படத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் fonts பிடித்திருந்தது. முதல் தடவை பார்த்தவுடனே அவர் இந்த installation-ஐ okay செய்துவிட்டார். எந்த மாற்றமும் செய்யச்சொல்லவில்லை. "சாரு, ஏன் square வச்சிருக்காரு, ஏன் கீழ சாரு நிவேதிதான்னு பேர் இருக்கு? இதை ரெண்டையும் எடுக்க சொல்லிரலாமா?" என்று சாருவிடம் ஞானசூன்யமாகக் கேட்டேன். அவரும், "எடுக்க சொல்லிருங்க," என்றார். தொலைபேசியை வைத்தவுடன் திரும்பவும் அழைத்து, "ஸ்ரீராம், உங்களுக்கும் இதைப் பத்தி தெரியாது, எனக்கும் தெரியாது. அந்த square-உம் கீழே இருக்கும் பேரும் ஏதோ காரணமாகத்தான் வச்சிருப்பார்; Both adds something to the overall texture," என்றார்.



ஓவியர் ஸ்ரீனிவாசனுடன் பின்னர் பேசிக்கொண்டிருந்தபொழுது, இந்த installation-இல் பயன்படுத்தியிருக்கும் யுத்தியின் பெயர் 'Op Art' என்று விளக்கினர், 1930-களில் இந்த முறை பயன்பாட்டிற்கு வந்தது என்றார். 1930 - '60கள் வரை இங்கிலாந்தில் இந்த movement பிரபலமாக இருந்தது என்றும் கூறினார்.

"அந்த floral designs-உம், வலது மூலையில் உள்ள square-உம், கீழே உள்ள சாரு நிவேதிதா என்ற பெயரும், தலைகீழாக இருந்த சாருவின் படமும் இந்த படத்தைப் பார்க்கும் ஒருவனை disturb செய்யும். பார்வையாளனை 'சாரு நிவேதிதாவின் ஒன்பது புத்தகங்கள் வெளியீட்டு விழா' என்ற text-ஐ நோக்கி அவன் பார்வையை செலுத்த வைக்கும்," என்றார்.

மேலும், "தலைகீழாக இருக்கும் சாருவின் படத்தில் அந்த கண்கள் vertical-ஆக ஒரே நேர்கோட்டில் இருக்கும். இதை இரண்டு தனி புகைப்படங்கள் என்று புரிந்துகொள்ளக் கூடாது. இது ஒரு தனி புகைப்படம் என்றே புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.

மேலும், "வெறும் யுக்தியாக மட்டும் இந்த installation-ஐ புரிந்துகொள்ளக் கூடாது. வேறு எந்த எழுத்தாளருக்கும் இப்படி தலைகீழாக படம் வைக்க முடியாது. சமூகத்தின் பொதுபுத்தியிலிருந்து விலகி, status quo-வுக்கு எதிராக செயல்படும் சாருவுக்கு மட்டுமே இந்த installtaion பொருந்தும்," என்றார்.

Friday, February 5, 2016

பின்நவீனத்துவ போலி - சுரேஷ் கண்ணன் கட்டுரையை முன்வைத்து

நான் நாற்பது வருட அனுபவம் உள்ள ஒரு மருத்துவர் என வைத்துக்கொள்வோம். லண்டனிலும் அமெரிக்காவிலும் சிறப்புப் பயிற்சிகள் முடித்துள்ளேன். லட்சக்கணக்கான பிணியாளர்களை குணமாக்கியுள்ளேன். ஆயிரக்கணக்கான அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளேன்.
ஒருவர், என் அறுவைசிகிச்சை யுத்திகளை (surgical techniques) குறை சொல்லலாம். இந்த பிணியாளருக்கு இந்த மருந்து தரக்கூடாது என ஒருவர் வாதாடலாம். நான் அதிகமாகக் கட்டணம் வாங்குகிறேன் என குற்றம் சாட்டலாம். தேவையின்றி ரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் ஆகியவற்றை பரிந்துரைக்கிறேன் என குற்றம் சாட்டலாம். இவை அனைத்தும் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள். அவற்றை நான் தாரளாமாக வரவேற்கிறேன்.
ஆனால், இவர் டாக்டரே இல்லை, இவர் போலி டாக்டர் என ஒருவர் சொன்னால், அது என் மீது வைக்கப்படும் விமர்சனம் இல்லை; அவதூறு. நான் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
***
சாரு நிவேதிதா, ஜே ஜே சில குறிப்புகள் நாவலை போலி என்றாரே என நீங்கள் கேட்கலாம். சாரு நிவேதிதா தன் கருத்தை நிறுவ 1980களிலேயே அந்த விமர்சனத்தை தனி புத்தகமாகப் போட்டு, இலவசமாக விநியோகித்தார். எதற்கு? தமிழுக்காக. அந்தக் கட்டுரைகள் தற்போது, வரம்பு மீறிய பிரதிகள் புத்தகத்தில் உள்ளன. உயிர்மை வெளியீடு. நீங்கள் சாருவின் எழுத்தை போலி என்கிறீர்களா? உங்கள் கருத்தை நிறுவ ஐநூறு பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள். வேண்டாம், குறைந்தது ஐம்பது பக்கம்.

Thursday, February 4, 2016

ஓஷோவும் சாரு நிவேதிதாவும்


ஓஷோ இந்த விடியோவில் மூச்சுக்கு முந்நூறு தடவை ‘fuck’ என்கிறார். கேட்கும் அனைவரும் வாய் ஓயாமல் சிரிக்கின்றனர். இப்பொழுது பார்க்கும் பொழுதும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.



அதே போல், எக்ஸைல் (பக்கம் எண் 319, 320 – இரண்டாம் பதிப்பு) நாவலில் பு** என்ற வார்த்தையை இப்படியெல்லாம்கூட எழுத முடியுமா, என்று எண்ணும்படி சாரு எழுதியிருப்பார். சிரிக்க சிரிக்க படிக்கலாம்.

பாஷோ - வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள்

கடந்த இரண்டு நாட்களாக முகநூலில் 'பாஷோ' கவிதை இதழ் பற்றி நிறைய நிலைத்தகவல்கள். தாங்கள்தான், இதை முதன்முதலில் வெளியே சொல்கிறோம் என்ற போலி இறுமாப்புவேறு. சாரு நிவேதிதா புதிய தலைமுறையில் வெளியான வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் தொடரில், ஃபெப்ருவரி 19, 2015 அன்று எழுதியுள்ளதை கீழே கொடுத்துள்ளேன். வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள், உயிர்மை வெளியீடாக, ஃபெப்ருவரி 27, 2016 அன்று வெளியாகிறது.


***


பாஷோ - புகைப்படம் நன்றி: விக்கிமீடியா காம்மன்ஸ்



“பாஷோ. ஜப்பானின் அதிமுக்கியமான ஹைக்கூ கவிஞன். பிறப்பு 1644. ஒரு சாதாரண சாமுராய் வீரனின் மகனாகப் பிறந்த பாஷோ ஜப்பானிய ஹைக்கூவின் தலைசிறந்த கவியாகக் கொண்டாடப்படுகிறார். அவர் 1689-ஆம் ஆண்டு கையில் ஒரு காசு எடுத்துக் கொள்ளாமல் ஐந்து மாதங்கள் நடந்தே 1200 மைல் தூரம் பயணம் செய்தார். பிரபலமான கவியாக இருந்ததால் அவரை அடையாளம் கண்டு கொள்ளும் மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் உணவு உட்கொண்டார். அந்தப் பயண அனுபவங்களை ஹைக்கூ ஆகவும் உரைநடையாகவும் பதிவு செய்திருக்கிறார். அதில் ஒரு ஹைக்கூ:


கொசுக்களும் பூச்சிகளும் கடிக்க
இரவு முழுதும் உறக்கம் இல்லை
தலைக்கு அருகில் ஒரு குதிரை மூத்திரம் பெய்கிறது.


இப்போதும் பாஷோ நடந்து சென்ற 1200 மைல்களையும் நடந்தே கடப்பதை பலரும் ஒரு புனித யாத்திரையாகவே மேற்கொள்கின்றனர். அதே பாதையில் என் கவி நண்பன் கவினோடு ஒருமுறை செல்ல வேண்டும் என்று எனக்கொரு ஆசை. இன்னும் கவினை நான் சந்தித்தது இல்லை. கவிதைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். கவினின் கவிதைகளை வாசிப்பது ஒரு தியானத்துக்குள் சென்று நம்மை மறந்து விடுவது போன்ற அனுபவம். மாதிரிக்கு இரண்டு:


கல்லறை மேல்
அமரும் பறவைகள்
கனவுகளையெடுத்து
பறந்து போகின்றன
ஆகாயத்திற்கு அப்பால்.


***


ஒரு வானம் வைத்திருக்கிறேன்
ஒரு கோடி சிறகுகளும் வைத்திருக்கிறேன்.


***


கவின் இப்போது பாஷோ என்ற பெயரில் ஒரு வித்தியாசமான கவிதை இதழைக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டே பக்கம். மஞ்சள் மற்றும் பிங்க் வண்ணங்களில் வழவழ தாள். முழுக்கவும் ஹைக்கூ கவிதைகள். அதில் அய்யப்ப மாதவனின் ஒரு கவிதை:


புத்தனின் அசைவற்ற
மடியில் நிற்கிறது
அந்தரத்தில் அலைந்த காகம்.  


முகவரி, கோவைக்கு அருகில் நடுப்பட்டி கிராமம் என்று போட்டிருக்கிறது. ம்…  தமிழ் இலக்கியம் பட்டிதொட்டியெல்லாம் பரவிக் கிடப்பதில் எனக்குக் கன குஷி. பாஷோ படித்ததால் எனக்குத் தோன்றிய ஒரு குட்டிக் கவிதை:


அன்பைப் பொழி
ஆசையை ஒழி.”

***

Monday, February 1, 2016

சிறுதெய்வங்கள்

புகைப்படம் நன்றி: விக்கிமீடியா காம்மன்ஸ்

குருக்குத்துறைக்குப் போய்விட்டுப் போகலாம் சாரு, என்றேன். சரி என்றார். ஒரு கருத்தரங்கிற்காக ஆறு மாதங்கள் முன் நெல்லை சென்றிருந்தோம். தாமிரபரணியைப் பார்த்தவுடனே சாரு சொன்னார், "நான் இந்தக் கோவிலுக்கு ஏற்கனவே வந்திருக்கேனே," என்று. இருபது வருடங்கள் முன் வேலை பிடிக்காமல், ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அடிக்கடி திருநெல்வேலி வந்ததாகவும் குருக்குத்துறையில் அன்றாடும் நீச்சலடித்ததாகவும் சொன்னார்.

காலை, ரயில் கோவில்பட்டியைத் தாண்டும்போதே," இது தேவதச்சன் ஊர்," என்று சொன்னார். அவர் சிந்தனை முழுவதும் இலக்கியம்தான், எப்பொழுதும்.

லேனா குமார் என்ற ஒரு நண்பர் வீட்டில்தான் நெல்லை வந்தால், தங்கியிருப்பேன். நான் கட்டிலில் படுத்துக்கொள்வேன்; குமார், அவர் மனைவி, குழந்தைகள் பாயில். மாதக்கணக்கில் அவர் வீட்டில் தங்கியிருப்பேன். இலக்கியம், பேச்சு, ஊர் சுற்றல் என்று நாட்கள் ஓடும், என சொல்லிக்கொண்டே போனார். அவர் இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை; அவரை இன்றே பார்த்தாக வேண்டும் என்றார்.

இரண்டு மூன்று நண்பர்கள் மூலம் முயற்சித்து, கடைசியில் மதுரை அருணாச்சலம் மூலம் லேனா குமாரின் தொலைபேசி எண் கிட்டியது. மாலை சந்திப்பதாக ஏற்பாடு.

கருத்தரங்கு முடிந்து, மதியம் திருச்செந்தூர் சென்றோம், திரும்பி வரும் வழியில், ஆழ்வார் திருநகரி போகலாம் சாரு என்றேன். ஆனால், குமாருடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; தமிழ் இலக்கியம் இவரைப் போன்ற சிறுதெய்வங்களால்தான் காப்பற்றப்பட்டு வருகிறது என்றார். எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை.

தான் ஏன் கோயிலுக்கு போவதைவிட குமார் போன்றோரிடம் பேசுவதை அதிகம் விரும்புகிறேன் என்பதை சொல்ல ஆரம்பித்தார். மனிதர்கள் அவ்வளவு பாவங்களையும் செய்துவிட்டு, கடவுள்முன் வெக்கமின்றி நிற்பது பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்; அதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் நாவலின் சாராம்சம். கதையை கேட்க கேட்க, காரோட்டி அழுதுவிட்டார்.

நானும் கோயிலை ஒரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறேன் சாரு என்று சொல்லிகொண்டிருந்த போது, இயக்குனர் அருண்குமாரிடமிருந்து சாருவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது; சேதுபதி படத்துக்கு சாருவின் ஆசியைக் கோரியிருந்தார்.

மாலை, லேனா குமாரை அவர் நண்பர்களுடன் சந்தித்தோம். சாருவும் குமாரும் இருபதாண்டு கதைகளைப் பேசிக்கொண்திருந்தனர். ஏதோ, நேற்று மாலைதான் இருவரும் உரையாடிக்கொண்டிருந்ததைப் போலவும், அந்தப் பேச்சை இன்று மாலை தொடர்வது போலவும் இருந்தது.

சாரு அப்பொழுது கல்யாணமாகியும் பிரம்மச்சாரி. மேலதிகாரியின் அழிச்சாட்டியம் தாங்காமல், வேலைக்குப் போய் மாதங்கள் ஆகிவிட்டன. குமாருடன் பேட்டையில் ஒரு ஜோதிடரைப் பார்த்திருக்கிறார். உங்களுக்கு ஆறு மாதத்தில் இன்னொரு திருமணம் நடக்கும்; தபால் நிலைய வேலையில் திரும்பவும் சேர்வீர்கள் என்றாராம் ஜோதிடர். சாருவும் குமாரும் நம்பாமல் சிரித்தார்களாம். (இந்த நிகழ்வின் சுருக்கிய வடிவம் ராஸ லீலாவில் உள்ளது.)

அந்த ஜோதிடரைப் பார்க்கவும் சாரு விரும்பினார். ஆனால், அவர் இறந்துவிட்டாராம்.

வருடந்தவறாமல், குமாரும் நண்பர்களும் திருவனந்தபுரம் திரைப்பட விழாவுக்குச் சென்றுவிடுகின்றனர். தினமும் மாலை, பாளையங்கோட்டையில் ஒரு டீக்கடையில் இலக்கிய விவாதம் உண்டு.

சாரு ஆன்லைன்கூட இவர்கள் வாசிப்பதில்லை. ஆனால், சாருவின் அனைத்து புத்தகங்களையும் வாசித்திருந்தார்கள். தி இந்துவில் எஸ்.ரா.வின் தொடரில் இருந்த ஒரு தகவல்பிழையை காட்டமாக விமர்சித்துக்கொண்டிருந்தார் குமார்.

ஒரு சிறு நகரத்தில், இலக்கியம் படிக்கும் நான்கைந்து நண்பர்களை ஒருங்கிணைத்து, புத்தகங்கள் பற்றி உரையாடி, விமர்சித்து, நண்பர்களுக்கு பரிந்துரைத்து, வாசிப்பை ஊக்கப்படுத்தும் பணியைச் செய்துகொண்டிருப்பவர் குமார். ஒவ்வொரு ஊரிலும் இரண்டு மூன்று லேனா குமார்கள் இருக்கிறார்கள். பெரம்பலூரில் தாரேஸ் அஹமது. ஈரோட்டில்  ஸ்டாலின் குணசேகரன்.

இவரைப் போன்ற சிறுதெய்வங்கள் தங்களை விளம்பரப்படுத்திகொள்வதில்லை. இவர்கள் யாரென்றே இலக்கிய மக்கள்கூட அறிய வாய்ப்பில்லை. முகநூலில் இவர்களுக்கு கணக்கில்லை. ஆனால், தமிழை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும் வாசிப்பை பரப்புவதிலும் இவரைப் போன்ற சிறுதெய்வங்களின் பங்கு அலாதியானது.



Tuesday, January 26, 2016

இந்தியா 1948 - மதிப்புரை



சந்தர்ப்பவசத்தால், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சுந்தரம் என்பவனுடைய கதையை இந்நாவலில் அசோகமித்திரன் சொல்லுகிறார்.

யுத்தங்களுக்கிடையில் நாவலில் வரும் பம்பாய் அண்ணாதான் இந்த நாவலில் சுந்தரம்.

எளிய கதை. சுந்தரத்தின் மனக்கிலேசங்கள்தான் நாவல் முழுவதும். ஆனால், சுந்தரம், பார்வதி, லட்சுமி, அம்மா, மாமியார், மணி, ஜானகி, நிர்மலா, விநாயக் முதலிய சுவாரசியமான கதாப்பதிரங்கள், நாவலுக்கு சுவை கூட்டுகிறது.

எழுபது ஆண்டுகள் முந்தைய பம்பாய் எப்படியிருந்தது; தாராவி எப்படியிருந்தது; மின்சார ரயில்கள் எப்படியிருந்தது, என அந்தக்கால பம்பாய் ஒரு பாத்திரமாக நாவலில் உள்ளது.

சுதந்திர இந்தியாவின் ஆரம்ப நாட்களில் தில்லியில் அதிகார வர்க்கம் எடுத்த நிலைபாடுகள் என்ன என்பதையும் இந்நாவல் மூலம் அறிய முடிகிறது.

1946 - 1948-இல் அமெரிக்கா எப்படியிருந்தது; இரண்டாம் உலகப் போர் முடிந்து நாடு திரும்பிய போர் வீரர்களின் மனநிலை, அவர்களை அந்நாடு எதிர்கொண்ட விதம் ஆகியவற்றையும் விலாவரியாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.

அசோகமித்திரனின் நாவல்களில் தொடர்ந்து, அம்மா கதாபாத்திரங்கள் வலிமையானவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். மகன்கள் மற்றும் மருமகள்கள் அம்மாவைப் பார்த்து பயப்படுகிறார்கள். குடும்பத்தின் முக்கிய முடிவுகளை அம்மாதான் எடுக்கிறாள். சுந்தரம் தன் இரண்டாம் திருமணம் பற்றி தன் மனைவி எப்படி எடுத்துக்கொள்வாளோ என்பதைவிட, தன் அம்மா எப்படி எடுதுக்கொள்வாளோ என்றுதான் அதிகம் பயப்படுகிறான்.

சுந்தரம் தன் மாமனாரிடம் பேசுமிடம் ரசமானது. படேல், கிருஷ்ணன் குடும்பத்தை வீட்டை விட்டு காலி செய்ய சொல்லுமிடமும் பிடித்திருந்தது.

நற்றிணை வெளியீடு. இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023953.html

Friday, January 1, 2016

மெனிஞ்சியோமா - விமர்சனம்



நண்பர் செல்வக்குமார் கணேசன், "எனக்குப் பிடிக்கவில்லை; நீங்கள் டாக்டர் என்பதால் இந்த நாவல் உங்களுக்குப் புரியும்," என்று சொல்லிக் கொடுத்தார் இந்த நாவலை.

'மெனிஞ்சியோமா' என்பது மூளையில் வரும், உயிருக்கு ஆபத்தில்லாத ஒருவகை கேன்சர். அறுவைசிகிச்சை மூலம் சந்துருவுக்கு அந்த கட்டி அகற்றப்படுகிறது. அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் 'எனிமா'வில் ஆரம்பிக்கிறது சந்துருவுக்கான கஷ்டங்கள். அறுவைசிகிச்சைக்குப் பின் தீவிர கண்காணிப்பு வார்டில் அவன் படும் இல்லல்கள், வீட்டுக்கு வந்த பின் அவனுக்கு வரும் வலிப்பு, அதனால் அவன் மனமும் உடலும் படும் இல்லல்கள், அவன் தந்தையின் மன வருத்தம் ஆகியவற்றை இந்த நாவல் சொல்கிறது.

ஓரிடத்தில் 'discharge summary' என்று நோயாளியின் MRI சோதனையின் முடிவுகள் தரப்பட்டிருக்கிறது - அதுவும் தப்புந்தவறுமாக. ஆங்கில வார்தைகள் குறைக்கப்பட்டு, தேவையில்லாத மருத்துவ 'name droppings'-ஐ தவிர்த்திருந்தால், ஒரு நல்ல நாவல் கிடைத்திருக்கலாம். மூளையின் உள்ளமைப்பு, அதன் நரம்புப் பின்னல்கள், ரசாயன மாற்றங்கள் ஆகியவற்றை கூகிளில் இருந்து எடுத்து எழுதினதுபோல், செயற்கையாக, தேவையில்லாததாக உள்ளது.

சில பிணியாளர்கள் - அதுவும் குறிப்பாக முடக்குயியல் (Rheumatology) பிணியாளர்கள் - தங்கள் நோய்மை பற்றியும், அதற்கான மருந்துகள், மருத்துவ முறைகள் பற்றியும் நன்றாக, தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த நாவலில், கணேசகுமாரன், மருத்துவக் குறிப்புகளை, மூளை பற்றிய, மூளையின் ரசாயனங்கள் பற்றிய குறிப்புகள் இல்லாமல்கூட சந்துருவின் நோய்மையை, அவனின் வலியை வாசகனுக்குக் கடத்தியிருக்க முடியும். சாரு நிவேதிதாவின் 'ராஸ லீலா'வில் கண்ணாயிரம் பெருமாள் 'பைபாஸ்' அறுவைசிகிச்சைக்குப் பின், மருத்துவமனையில் இருக்கும் பிரதி, குறைவான மருத்துவ வார்த்தைகளுடன்தான் இருக்கும். ஆனால், படிக்கும் வாசகனுக்கு, கண்ணாயிரம் பெருமாளின் நோய்மை, அவனின் உடல்-மன வலி ஆகியவற்றை வாசகனுக்குக் கடத்தியிருப்பர் சாரு நிவேதிதா. ராஸ லீலாவில் intense-ஆன பகுதி அது.

சந்துருவின் அப்பா படும் கஷ்டத்தை மட்டும் கணேசகுமாரன் சரியாக, வாசகனுக்குக் கடத்தியிருகிறார். 

புதிய களம்; ஆனால், இன்னும் செறிவான வார்த்தைகள் (மருத்துவ வார்த்தைகள் அல்ல), இன்னும் சரியான கதைசொல்லல் இருந்திருக்கலாம். இருந்திருந்தால், ஒரு காத்திரமான பிரதி நமக்குக் கிடைத்திருக்கும்.

கணேசகுமாரனின் சிறுகதைகளை சாரு நிவேதிதா தனது வலைதளத்தில் பாராட்டியிருந்தார். படித்துப் பார்க்கவேண்டும்.