Tuesday, January 26, 2016

இந்தியா 1948 - மதிப்புரை



சந்தர்ப்பவசத்தால், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சுந்தரம் என்பவனுடைய கதையை இந்நாவலில் அசோகமித்திரன் சொல்லுகிறார்.

யுத்தங்களுக்கிடையில் நாவலில் வரும் பம்பாய் அண்ணாதான் இந்த நாவலில் சுந்தரம்.

எளிய கதை. சுந்தரத்தின் மனக்கிலேசங்கள்தான் நாவல் முழுவதும். ஆனால், சுந்தரம், பார்வதி, லட்சுமி, அம்மா, மாமியார், மணி, ஜானகி, நிர்மலா, விநாயக் முதலிய சுவாரசியமான கதாப்பதிரங்கள், நாவலுக்கு சுவை கூட்டுகிறது.

எழுபது ஆண்டுகள் முந்தைய பம்பாய் எப்படியிருந்தது; தாராவி எப்படியிருந்தது; மின்சார ரயில்கள் எப்படியிருந்தது, என அந்தக்கால பம்பாய் ஒரு பாத்திரமாக நாவலில் உள்ளது.

சுதந்திர இந்தியாவின் ஆரம்ப நாட்களில் தில்லியில் அதிகார வர்க்கம் எடுத்த நிலைபாடுகள் என்ன என்பதையும் இந்நாவல் மூலம் அறிய முடிகிறது.

1946 - 1948-இல் அமெரிக்கா எப்படியிருந்தது; இரண்டாம் உலகப் போர் முடிந்து நாடு திரும்பிய போர் வீரர்களின் மனநிலை, அவர்களை அந்நாடு எதிர்கொண்ட விதம் ஆகியவற்றையும் விலாவரியாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.

அசோகமித்திரனின் நாவல்களில் தொடர்ந்து, அம்மா கதாபாத்திரங்கள் வலிமையானவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். மகன்கள் மற்றும் மருமகள்கள் அம்மாவைப் பார்த்து பயப்படுகிறார்கள். குடும்பத்தின் முக்கிய முடிவுகளை அம்மாதான் எடுக்கிறாள். சுந்தரம் தன் இரண்டாம் திருமணம் பற்றி தன் மனைவி எப்படி எடுத்துக்கொள்வாளோ என்பதைவிட, தன் அம்மா எப்படி எடுதுக்கொள்வாளோ என்றுதான் அதிகம் பயப்படுகிறான்.

சுந்தரம் தன் மாமனாரிடம் பேசுமிடம் ரசமானது. படேல், கிருஷ்ணன் குடும்பத்தை வீட்டை விட்டு காலி செய்ய சொல்லுமிடமும் பிடித்திருந்தது.

நற்றிணை வெளியீடு. இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023953.html

Friday, January 1, 2016

மெனிஞ்சியோமா - விமர்சனம்



நண்பர் செல்வக்குமார் கணேசன், "எனக்குப் பிடிக்கவில்லை; நீங்கள் டாக்டர் என்பதால் இந்த நாவல் உங்களுக்குப் புரியும்," என்று சொல்லிக் கொடுத்தார் இந்த நாவலை.

'மெனிஞ்சியோமா' என்பது மூளையில் வரும், உயிருக்கு ஆபத்தில்லாத ஒருவகை கேன்சர். அறுவைசிகிச்சை மூலம் சந்துருவுக்கு அந்த கட்டி அகற்றப்படுகிறது. அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் 'எனிமா'வில் ஆரம்பிக்கிறது சந்துருவுக்கான கஷ்டங்கள். அறுவைசிகிச்சைக்குப் பின் தீவிர கண்காணிப்பு வார்டில் அவன் படும் இல்லல்கள், வீட்டுக்கு வந்த பின் அவனுக்கு வரும் வலிப்பு, அதனால் அவன் மனமும் உடலும் படும் இல்லல்கள், அவன் தந்தையின் மன வருத்தம் ஆகியவற்றை இந்த நாவல் சொல்கிறது.

ஓரிடத்தில் 'discharge summary' என்று நோயாளியின் MRI சோதனையின் முடிவுகள் தரப்பட்டிருக்கிறது - அதுவும் தப்புந்தவறுமாக. ஆங்கில வார்தைகள் குறைக்கப்பட்டு, தேவையில்லாத மருத்துவ 'name droppings'-ஐ தவிர்த்திருந்தால், ஒரு நல்ல நாவல் கிடைத்திருக்கலாம். மூளையின் உள்ளமைப்பு, அதன் நரம்புப் பின்னல்கள், ரசாயன மாற்றங்கள் ஆகியவற்றை கூகிளில் இருந்து எடுத்து எழுதினதுபோல், செயற்கையாக, தேவையில்லாததாக உள்ளது.

சில பிணியாளர்கள் - அதுவும் குறிப்பாக முடக்குயியல் (Rheumatology) பிணியாளர்கள் - தங்கள் நோய்மை பற்றியும், அதற்கான மருந்துகள், மருத்துவ முறைகள் பற்றியும் நன்றாக, தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த நாவலில், கணேசகுமாரன், மருத்துவக் குறிப்புகளை, மூளை பற்றிய, மூளையின் ரசாயனங்கள் பற்றிய குறிப்புகள் இல்லாமல்கூட சந்துருவின் நோய்மையை, அவனின் வலியை வாசகனுக்குக் கடத்தியிருக்க முடியும். சாரு நிவேதிதாவின் 'ராஸ லீலா'வில் கண்ணாயிரம் பெருமாள் 'பைபாஸ்' அறுவைசிகிச்சைக்குப் பின், மருத்துவமனையில் இருக்கும் பிரதி, குறைவான மருத்துவ வார்த்தைகளுடன்தான் இருக்கும். ஆனால், படிக்கும் வாசகனுக்கு, கண்ணாயிரம் பெருமாளின் நோய்மை, அவனின் உடல்-மன வலி ஆகியவற்றை வாசகனுக்குக் கடத்தியிருப்பர் சாரு நிவேதிதா. ராஸ லீலாவில் intense-ஆன பகுதி அது.

சந்துருவின் அப்பா படும் கஷ்டத்தை மட்டும் கணேசகுமாரன் சரியாக, வாசகனுக்குக் கடத்தியிருகிறார். 

புதிய களம்; ஆனால், இன்னும் செறிவான வார்த்தைகள் (மருத்துவ வார்த்தைகள் அல்ல), இன்னும் சரியான கதைசொல்லல் இருந்திருக்கலாம். இருந்திருந்தால், ஒரு காத்திரமான பிரதி நமக்குக் கிடைத்திருக்கும்.

கணேசகுமாரனின் சிறுகதைகளை சாரு நிவேதிதா தனது வலைதளத்தில் பாராட்டியிருந்தார். படித்துப் பார்க்கவேண்டும்.