Thursday, April 21, 2016

குறைந்த ஒளியில் - விமர்சனம்

குறைந்த ஒளியில் - குறுங்கட்டுரைகள் - பிரபு காளிதாஸ், உயிர்மை வெளியீடு, முதல் பதிப்பு - 2016



பிரபு காளிதாஸின் முகநூல் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். டாம் அண்ட் ஜெர்ரியில், இவர் ஜெர்ரி. டாம், என்ன கேமரா வைத்திருகிறாய் எனக் கேட்கும் 'நண்பர்கள்', பண பாக்கி வைக்கும் வாடிக்கையாளர்கள், கல்யாணத் தரகு இணையதளங்கள், என எண்ணற்ற மனிதர்கள். தான் அடிவாங்கியதை சுவாரசியமாக, பகடி கலந்து சொல்லியிருக்கிறார்.

சில கட்டுரைகள் சிறுகதைகளாக வந்திருக்க வேண்டியவை. 'ராணி பேரடைஸ்', 'சொம்மா', 'சிலோன் பரோட்டாவும் முட்டைக் கறியும்', 'பாட்டு மட்டும் எங்கேர்ந்து வருது', 'பேச வேண்டும்', 'ங்கொப்பன் வூட்டு வண்டியாடா?', 'இருபது பர்சண்ட் குடுகன்னும்மா..' ஆகிய கட்டுரைகளில் சிறுகதைக்கான கணங்கள் இருந்தன. இவற்றை, கொஞ்சம் விரிவாக்கி, செறிவாக்கி எழுதினால், நல்ல சிறுகதைகளாக உருமாறும்.

'என்ன நடக்கிறது குழந்தைகளுக்கு', 'சாகும் வரை விடமாடார்கள்' ஆகியவை நல்ல கட்டுரைகள்.

சில கட்டுரைகள் படிக்க படிக்க சிரிப்பு. உதாரணம்: 'ங்கொப்பன் வூட்டு வண்டியாடா?', 'பீஸ்', 'போலீஸ் நாய்', 'நம்பிக்கை இல்லையா?'

'உயிரில் கலந்த எழுத்து' கட்டுரையின் மொழி நன்றாக இருந்தது.

'முடியுமா?' என்று பத்து வரிகளில் அருமையான சிறுகதை ஒன்று உள்ளது.

'வெளித்தோற்றம்' கட்டுரையில் மேல்தட்டு மனிதர்கள் பற்றிய பிரபுவின் விமர்சனம் சரி. ஆனால் அதை இன்னும் முதிர்ச்சியுடன் எழுதியிருக்க வேண்டும். பணக்காரன் கெட்டவன், ஏழை நல்லவன், எனப் பொருள்படும்படி அந்தக் கட்டுரை உள்ளது. ஆனால், பிரபு அப்படி நினைப்பவர் இல்லை. இந்தப் பிரச்சனையை 'கிடைச்சா வாங்கித் தர்றோம்', 'என்னடா வேணும்?' கட்டுரைகளில் முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார்.

'பிஹாரிகள்' கட்டுரை இந்தத் தொகுப்பில் தேவையில்லாதது. வெறும் தகவல் மட்டுமே உள்ளது. ஒரு கட்டுரையில் ஒரு முற்றுபெற்ற தன்மை இருக்கவேண்டும். அது மற்ற கட்டுரைகளில் உள்ளது. இன்னும் விரிவாக்கி எழுதப்படவேண்டிய கட்டுரை அது.

'கிழியும் தருணம்' கட்டுரையிலும் ஒன்றுமே இல்லை. கட்டுரைக்கான கணங்களோ, சிறுகதைக்கான கணங்களோ இல்லாத குறிப்பு அது. தொகுப்பில் பிடிக்காத இரண்டாவது கட்டுரை இது.

மூன்று கட்டுரைகளில் சாருவின் உத்தியான ஒரே வார்த்தையை தொடர்ச்சியாக அரைப் பக்கத்துக்கு எழுதுவதை பிரபு கையாண்டிருக்கிறார். இரண்டு கட்டுரைகளில் அது பொருந்துகிறது. ஒரு கட்டுரையில் 'ஓடி, ஓடி...' என தொடர்ச்சியாக வருகிறது. அது பொருந்தவில்லை. சாருவின் எழுத்தின் பாதிப்பில் எழுதுவது வேறு. சாருவை நகல் எடுப்பது வேறு. அந்த ஓரிடத்தில் மட்டும், பிரபு சாருவை நகலெடுப்பதாகத் தோன்றியது.

அடுத்தப் பதிப்ப்பில் Index-உம், கட்டுரை வெளியான தேதியும், குறிப்புகளுக்கான கடைசி இரண்டு பக்கங்களும் இடம் பெற வேண்டும்.

பிரபு, தன் அடுத்த புத்தகத்தை வேண்டுமானால் குறுங்கட்டுரைகள் தொகுப்பாகப் போடலாம். அதற்கு அடுத்த புத்தகங்கள் இன்னும் விரிவாக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்புகளாகவும், சிறுகதைகளாகவும் இருக்க வேண்டும் என அன்புக் கோரிக்கை வைக்கிறேன்.

இணையம் மூலம் வாங்க: bit.ly/1Sdf2i3

Thursday, April 14, 2016

க.நா.சு.வின் 'ஆட்கொல்லி' - மதிப்புரை

ஆட்கொல்லி - நாவல் - க.நா.சுப்ரமண்யம், முதல் பதிப்பு: 1956; தற்போதைய பதிப்பு: 2014, விருட்சம் வெளியீடு.


                                                                 க.நா.சு.

பணக்காரன் தன் உற்றார் உறவினரை மதிப்பதில்லை. உற்றார் உறவினரும் இதன் காரணமாக அவனிடம் விலகியே உள்ளனர். எனவே, பணம் ஒரு ஆட்கொல்லி என்கிறார் க.நா.சுப்ரமண்யம்.

ராஜா, தன் பள்ளிக் காலத்தில் சில வருடங்கள் அவன் மாமா வேங்கடாசலம் வீட்டில் தங்கிப் படிக்கிறான். மாமா அரசுப் பள்ளி ஆசிரியர். மாதம் தொண்ணூற்றி மூணே முக்கால் ரூபாய் சம்பளம். ஆனால், குறுகிய காலத்திலேயே வேங்கடாசலம் லட்சாதிபதி ஆகிவிடுகிறார். ராஜாவுக்கு இது எப்படி என்றே புரியவில்லை. வெகுநாட்கள் கழித்துத்தான் ராஜாவுக்கு தெரிகிறது, வேங்கடாசலம் வட்டிக்குப் பணம் கொடுப்பதை உபதொழிலாகக் கொண்டுள்ளார், என்று.

கடனைத் திருப்பித் தர முடியாதவர்களிடம் இருந்து நிலம், வீடு முதலியவற்றை அபகரிக்கிறார் வேங்கடாசலம். இதெல்லாம் பாபம் இல்லையா மாமி என்று ராஜா, தன் அத்தை ஜானகியிடம் கேட்கிறான். அதற்கு ஜானகி, நாம் ஒன்றும் அடுத்தவர் சொத்தைப் பிடுங்கிக்கொள்ளவில்லை; நமக்கு வர வேண்டியதைத்தான் வாங்கிக்கொள்கிறோம்; அடுத்தவர் காசு ஒரு ருபாய்கூட நமக்கு வேண்டாம்; அதே நேரம் நம் காசு ஒரு ருபாயைக்கூட அடுத்தவரிடம் ஏமாறக்கூடாது, என்கிறாள்.

மேலோட்டமாகப் பார்த்தால், அவள் சொல்வது சரி என்று தோன்றும். ஆனால், வட்டிக்குப் பணம் தருவதே பாபம் இல்லையா என்று கேட்கிறார் க.நா.சு.

வறுமையில் இருக்கும் தன் தங்கை உதவி கேட்டு வந்தபோதுகூட அவளுக்கு உதவாமல், திரும்பி அனுப்பிவிடுகிறார் வேங்கடாச்சலம்.

ராஜா இரண்டு வருடங்கள் தன் மாமா வீட்டில் தங்கிப் படித்ததற்கு, ராஜாவின் அப்பாவிடம்  ஐநூறு ரூபாய் கேட்கிறார் வேங்கடாச்சலம். சாப்பாடு, தங்க இடம் கொடுத்தது ஆகிவற்றுக்கு அவர் காசு கேட்கவில்லை. வெளியில் போனால், சிறுவனுக்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவது, பேனா பென்சில் வாங்கித் தந்தது முதலிய செலவுகளை ஒவ்வொன்றாய் கணக்கு புத்தகத்தில் எழுதி, கணக்கு காண்பிக்கிறார் வேங்கடாசலம். மருமகனுக்கு செலவு செய்ததற்கு கணக்கு பார்ப்பதா என்று, காசு தர மறுக்கிறார் ராஜாவின் அப்பா.

மாமா வீட்டில் தினசரி உணவு - ரசம், வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம். ஒரு நாள் என்றால் பரவாயில்லை. வருடம் முழுவதும் இதுவேதான். இந்த உணவு பத்தாமல், உணவு விடுதிகளில் சாப்பிடுகிறான் ராஜா. முக்கியமான விஷயம், மாமா - மாமிக்கும் இதே உணவுதான்.

வேங்கடாச்சலம்-ஜானகி தம்பதியை முழுக்கவும் கெட்டவர்களாக க.நா.சு. காட்டவில்லை. கறுப்பு - வெள்ளைக்கு நடுவில் சாம்பல் நிறத்தில் அவர்களை சித்தரித்துள்ளார் க.நா.சு. இதுவே, இந்நாவலின் பலம்.

பணம் பற்றி ராஜா கூறும் வியாக்கியானங்கள் சத்தியமானவை. பாவ்லோ கொய்லோ நாவல்களில்தான் இப்படி தத்துவம் நிறையவும் கதை கம்மியாகவும் இருக்கும். நாம் படிப்பது அபுனைவா, இல்லை புனைவா என்று சந்தேகம் வரும். ஆனால், படிக்க சுவாரசியாமாக இருக்கும். உதாரணம்: எலெவன் மினிட்ஸ், தி அல்கெமிஸ்ட். பழுப்பு நிறப் பக்கங்களில், க.நா.சு.வை சாரு நிவேதிதா பாவ்லோ கொய்லோவுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

ஒரு சோகக்கதையில் அழுகை வரவைப்பது இலக்கியம் அல்ல, அனுதாபம் தருவிப்பதுதான் இலக்கியம்; இது ஒரு சில ஜாம்பவான்களுக்கே கைகூடியது, என்று முன்னுரையில் சொல்கிறார் க,நா.சு.

சாரு நிவேதிதாவின் ராஸ லீலா, கண்ணாயிரம் பெருமாள் என்ற குமாஸ்தா அஞ்சல் துறையில் படும் இன்னல்களையும் காமமே இல்லாத அவனது பாலியல் வறட்சியையும்தான் பேசுகிறது. முழுக்க சோகம். ஆனால், ஒவ்வொரு பக்கமும் பகடி. படிக்க படிக்க இன்பம். க.நா.சு., ராஸ லீலாவைப் படித்திருந்தால், சாரு நிவேதிதாவை ஜாம்பாவான்கள் பட்டியலில் சேர்த்திருப்பார்.

***

இணையம் மூலம் வாங்க: 'Wecanshopping' குஹனை, தொலைப்பேசி / வாட்ஸ்-அப் – +91 90032 67399 / 9940448599 மூலம் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாங்கலாம்.

விருட்சம் முகவரி:

நவீன விருட்சம், புதிய எண் 16, ராகவன் காலனி Flat F3, Seethalakshmi Apartments, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

Wednesday, April 6, 2016

மனம் கொத்திப் பறவை - மதிப்புரை


சாருவின் அனைத்துக் கட்டுரைத் தொகுப்புகளுக்கும் 'வாழ்வது எப்படி? - 1, 2, 3...' என்று பெயர் வைக்கலாம். நம் வசதிக்காகத்தான் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறார். கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள பெங்களூரு செல்கிறார் சாரு. இவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறையில் வேறு ஒருவர், அறையை காலி செய்துகொண்டிருக்கிறார். அந்த ஐந்து நிமிடத்தில் அந்த நபர், சாருவிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுத் தள்ளுகிறார். நாம் இன்னொருவருடன் எப்படி உரையாடுவது என்றே தெரியாமல் இருக்கிறோம்.

இந்தத் தொகுப்பின் ஆரம்பக் கட்டுரைகளில் நமக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத கோலா பூஃப் பற்றியும் ஹௌபாரா என்ற அறியவகைப் பறவை பற்றியும் சாரு நிவேதிதா எழுதுகிறார்.


ஏன் என்று யோசித்ததில், இது ஒரு உத்தி என புரிந்தது. இந்தப் பெயர்களை முதலில் காட்டி, வெகுஜன இதழ் மட்டுமே படிக்கும் ஒரு வாசகனை உள்ளே இழுக்கிறார் சாரு நிவேதிதா. ஹௌபாரா பற்றிக் குறிப்பிட்டு, அதே கட்டுரையில் ஹேமலட்டில் இருந்து இந்த வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.


"There is special providence in the fall of a sparrow. If it be now it is not to come; if it be not to come, it will be now; if it be not now, yet it will come - the readiness is all."


ஆங்கிலத்தில் இதன் சாரத்தை முழுவதும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே கட்டுரையில் இந்த வரிகளை மிக அருமையாக சாரு மொழிபெயர்த்திருக்கிறார்.


“இப்போது நடக்கும் என்றால், அது நடக்காமல் போகலாம்; நடக்காது என்றால், நடந்தாலும் நடந்துவிடலாம்; இப்போது நடக்கவே நடக்காது என்றால் அது நடந்தே தீரும். எல்லாம் நடப்பவற்றை எதிர்கொள்ளும் ஆயத்தத்தில்தான் இருக்கிறது. எப்படி பிதாவின் சித்தம் இல்லாமல் ஒரு சிட்டுக்குருவி தரையிலே விழாதோ, அதுபோலவே நம்முடைய உயிர் போவதும் போகாமல் இருப்பதும் இறைவனின் கையில்தான் இருக்கிறது!”

இந்தத் தொகுப்பில் வெளிப்பட்டிருக்கும் சாருவின் கோபம் பரிசுத்தமானது (innate) மற்றும் நியாயமானது (justified). ஹைதராபாத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடுவது பற்றிய பயிற்சி ஒன்று நடக்கிறது. காவலரின் கவனக்குறைவால், தோட்டா நிரப்பிய துப்பாக்கி, பயிற்ச்சியில் பயன்படுத்தப் படுகிறது. இதில் இரண்டு மாணவர்கள் இறக்கிறார்கள். அதிகம் போனால், இந்தக் காவலரை இடைநீக்கம் செய்வார்கள். இதுவே ஒரு ஐரோப்ப தேசத்தில் நடந்திருந்தால் கலவரம் வெடித்திருக்கும்; இங்கு இது மற்றும் ஒரு செய்தி, அவ்வளவுதான், எனக் கோபப்படுகிறார் சாரு. மேலும், தான் கலவரத்தை நியாயப் படுத்தவில்லை; தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் சாரு. இதற்கு மேல்தான் விஷயமே.


சாருவின் கோபம் innate என்று சொன்னேன் அல்லவா. இந்த வரிகளைப் படியுங்கள்.


"மாணவர்கள் ஏன் துப்பாக்கிபற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? துப்பாக்கி என்பது மனித உயிர்களைக் கொல்வதற்காக மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொலைக் கருவி; மனித நாகரிகத்தின் அவலங்களில் ஒன்று. துப்பாக்கியே இல்லாத சமூகம் உருவாவதைப்பற்றி அல்லவா மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்? அன்பையும் பண்பையும் போதிக்க மறந்துவிட்ட நாம், நம் குழந்தைகளுக்கு இவ்வாறாக வன்முறையைப் போதித்துக்கொண்டு இருக்கிறோம்."


சாருவின் உலகம் தனி. நம் உலகின் அசிங்கங்கள் அவருக்கு அந்நியமானவை. அவர் ஆன்மா பரிசுத்தமானது. அதுவே அவர் எழுத்திலும் வெளிப்படுகிறது.


***

மனம் கொத்திப் பறவை - முதல் பதிப்பு, 2010 - விகடன். இரண்டாம் பதிப்ப்பு, 2016 - உயிர்மை. 

இணையம் மூலம் வாங்க: http://bit.ly/1TJIDzN