Thursday, April 21, 2016

குறைந்த ஒளியில் - விமர்சனம்

குறைந்த ஒளியில் - குறுங்கட்டுரைகள் - பிரபு காளிதாஸ், உயிர்மை வெளியீடு, முதல் பதிப்பு - 2016



பிரபு காளிதாஸின் முகநூல் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். டாம் அண்ட் ஜெர்ரியில், இவர் ஜெர்ரி. டாம், என்ன கேமரா வைத்திருகிறாய் எனக் கேட்கும் 'நண்பர்கள்', பண பாக்கி வைக்கும் வாடிக்கையாளர்கள், கல்யாணத் தரகு இணையதளங்கள், என எண்ணற்ற மனிதர்கள். தான் அடிவாங்கியதை சுவாரசியமாக, பகடி கலந்து சொல்லியிருக்கிறார்.

சில கட்டுரைகள் சிறுகதைகளாக வந்திருக்க வேண்டியவை. 'ராணி பேரடைஸ்', 'சொம்மா', 'சிலோன் பரோட்டாவும் முட்டைக் கறியும்', 'பாட்டு மட்டும் எங்கேர்ந்து வருது', 'பேச வேண்டும்', 'ங்கொப்பன் வூட்டு வண்டியாடா?', 'இருபது பர்சண்ட் குடுகன்னும்மா..' ஆகிய கட்டுரைகளில் சிறுகதைக்கான கணங்கள் இருந்தன. இவற்றை, கொஞ்சம் விரிவாக்கி, செறிவாக்கி எழுதினால், நல்ல சிறுகதைகளாக உருமாறும்.

'என்ன நடக்கிறது குழந்தைகளுக்கு', 'சாகும் வரை விடமாடார்கள்' ஆகியவை நல்ல கட்டுரைகள்.

சில கட்டுரைகள் படிக்க படிக்க சிரிப்பு. உதாரணம்: 'ங்கொப்பன் வூட்டு வண்டியாடா?', 'பீஸ்', 'போலீஸ் நாய்', 'நம்பிக்கை இல்லையா?'

'உயிரில் கலந்த எழுத்து' கட்டுரையின் மொழி நன்றாக இருந்தது.

'முடியுமா?' என்று பத்து வரிகளில் அருமையான சிறுகதை ஒன்று உள்ளது.

'வெளித்தோற்றம்' கட்டுரையில் மேல்தட்டு மனிதர்கள் பற்றிய பிரபுவின் விமர்சனம் சரி. ஆனால் அதை இன்னும் முதிர்ச்சியுடன் எழுதியிருக்க வேண்டும். பணக்காரன் கெட்டவன், ஏழை நல்லவன், எனப் பொருள்படும்படி அந்தக் கட்டுரை உள்ளது. ஆனால், பிரபு அப்படி நினைப்பவர் இல்லை. இந்தப் பிரச்சனையை 'கிடைச்சா வாங்கித் தர்றோம்', 'என்னடா வேணும்?' கட்டுரைகளில் முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார்.

'பிஹாரிகள்' கட்டுரை இந்தத் தொகுப்பில் தேவையில்லாதது. வெறும் தகவல் மட்டுமே உள்ளது. ஒரு கட்டுரையில் ஒரு முற்றுபெற்ற தன்மை இருக்கவேண்டும். அது மற்ற கட்டுரைகளில் உள்ளது. இன்னும் விரிவாக்கி எழுதப்படவேண்டிய கட்டுரை அது.

'கிழியும் தருணம்' கட்டுரையிலும் ஒன்றுமே இல்லை. கட்டுரைக்கான கணங்களோ, சிறுகதைக்கான கணங்களோ இல்லாத குறிப்பு அது. தொகுப்பில் பிடிக்காத இரண்டாவது கட்டுரை இது.

மூன்று கட்டுரைகளில் சாருவின் உத்தியான ஒரே வார்த்தையை தொடர்ச்சியாக அரைப் பக்கத்துக்கு எழுதுவதை பிரபு கையாண்டிருக்கிறார். இரண்டு கட்டுரைகளில் அது பொருந்துகிறது. ஒரு கட்டுரையில் 'ஓடி, ஓடி...' என தொடர்ச்சியாக வருகிறது. அது பொருந்தவில்லை. சாருவின் எழுத்தின் பாதிப்பில் எழுதுவது வேறு. சாருவை நகல் எடுப்பது வேறு. அந்த ஓரிடத்தில் மட்டும், பிரபு சாருவை நகலெடுப்பதாகத் தோன்றியது.

அடுத்தப் பதிப்ப்பில் Index-உம், கட்டுரை வெளியான தேதியும், குறிப்புகளுக்கான கடைசி இரண்டு பக்கங்களும் இடம் பெற வேண்டும்.

பிரபு, தன் அடுத்த புத்தகத்தை வேண்டுமானால் குறுங்கட்டுரைகள் தொகுப்பாகப் போடலாம். அதற்கு அடுத்த புத்தகங்கள் இன்னும் விரிவாக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்புகளாகவும், சிறுகதைகளாகவும் இருக்க வேண்டும் என அன்புக் கோரிக்கை வைக்கிறேன்.

இணையம் மூலம் வாங்க: bit.ly/1Sdf2i3