Tuesday, January 26, 2016

இந்தியா 1948 - மதிப்புரை



சந்தர்ப்பவசத்தால், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சுந்தரம் என்பவனுடைய கதையை இந்நாவலில் அசோகமித்திரன் சொல்லுகிறார்.

யுத்தங்களுக்கிடையில் நாவலில் வரும் பம்பாய் அண்ணாதான் இந்த நாவலில் சுந்தரம்.

எளிய கதை. சுந்தரத்தின் மனக்கிலேசங்கள்தான் நாவல் முழுவதும். ஆனால், சுந்தரம், பார்வதி, லட்சுமி, அம்மா, மாமியார், மணி, ஜானகி, நிர்மலா, விநாயக் முதலிய சுவாரசியமான கதாப்பதிரங்கள், நாவலுக்கு சுவை கூட்டுகிறது.

எழுபது ஆண்டுகள் முந்தைய பம்பாய் எப்படியிருந்தது; தாராவி எப்படியிருந்தது; மின்சார ரயில்கள் எப்படியிருந்தது, என அந்தக்கால பம்பாய் ஒரு பாத்திரமாக நாவலில் உள்ளது.

சுதந்திர இந்தியாவின் ஆரம்ப நாட்களில் தில்லியில் அதிகார வர்க்கம் எடுத்த நிலைபாடுகள் என்ன என்பதையும் இந்நாவல் மூலம் அறிய முடிகிறது.

1946 - 1948-இல் அமெரிக்கா எப்படியிருந்தது; இரண்டாம் உலகப் போர் முடிந்து நாடு திரும்பிய போர் வீரர்களின் மனநிலை, அவர்களை அந்நாடு எதிர்கொண்ட விதம் ஆகியவற்றையும் விலாவரியாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.

அசோகமித்திரனின் நாவல்களில் தொடர்ந்து, அம்மா கதாபாத்திரங்கள் வலிமையானவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். மகன்கள் மற்றும் மருமகள்கள் அம்மாவைப் பார்த்து பயப்படுகிறார்கள். குடும்பத்தின் முக்கிய முடிவுகளை அம்மாதான் எடுக்கிறாள். சுந்தரம் தன் இரண்டாம் திருமணம் பற்றி தன் மனைவி எப்படி எடுத்துக்கொள்வாளோ என்பதைவிட, தன் அம்மா எப்படி எடுதுக்கொள்வாளோ என்றுதான் அதிகம் பயப்படுகிறான்.

சுந்தரம் தன் மாமனாரிடம் பேசுமிடம் ரசமானது. படேல், கிருஷ்ணன் குடும்பத்தை வீட்டை விட்டு காலி செய்ய சொல்லுமிடமும் பிடித்திருந்தது.

நற்றிணை வெளியீடு. இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023953.html