Tuesday, December 27, 2016

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்!

கிளிக்காவியம் ('தித்திக்காதே' தொகுப்பு) - மனுஷ்ய புத்திரன்

"நதிகள் உடைந்து
எனது நகரம் மூழ்கத் தொடங்கிய நாளில்
மக்கள் மேட்டு நிலங்களை நோக்கி
பைத்தியம் பிடித்தவர்களாக ஓடினார்கள்
யாருக்கும் உணவில்லை
தண்ணீர் இல்லை
கடைகள் மூடப்பட்டுவிட்டன
வளர்ப்பு நாய்களின் செத்த உடல்கள்
நீரில் மிதந்து சென்றன

நான் என் கிளிகளுக்கு
பழங்கள் கேட்டு
கொட்டுகிற மழையில்
தெருத்தெருவாக அலைந்தேன்
மூடப்பட்ட கடைகளின் கதவுகளை
கோபத்துடன் எட்டி உதைத்தேன்
ஒரு நகரத்தின் குழந்தைகள்
பசியோடு அழுதுகொண்டிருந்தபோது
நான் என் கிளிகளுக்கு
உணவு கொடுங்கள் என்று
நிர்பந்தித்தேன்."

இந்த வரிகளை சாரு நிவேதிதா வாசிக்கும்போது இடையில் சொல்கிறார்: "நானும் நிர்பந்திதேன், என் நாய்களுக்காக".




முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இறந்த அன்று நகரத்தில் எங்கும் கடைகள் திறந்திருக்கவில்லை. சரி, எங்குமே கடைகள் இல்லையெனில் செல்வகுமார், பிரபு காளிதாஸ், முத்துக்குமார் வீடுகளுக்கோ, மருத்துவ நண்பர்கள் வீடுகளுக்கோ சென்றுவிடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். சாரு காலையில் தொலைபேசியில் கேட்டார், எங்கு சாப்பிடப் போகிறீர்கள் என்று . ஏதேனும் கடை திறந்திருக்கும், தேட வேண்டும் என்று கூறினேன். செல்வகுமாரும் தொலைபேசியில் கூப்பிட்டு, எங்கும் கடை இல்லையெனில் வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லியிருந்தார். பேருந்துகள் ஓடவில்லை.

பிஸ்கட், பழங்கள் ஆகியவை ஒரு வேளைக்குத்தான் உதவும் என ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தில் உணர்திருந்தேன் - காவிரி பிரச்னை பந்த் அன்று.

முக்கால் மணி நேரம் தேடியும் ஒரு கடைகூட திறந்திருக்கவில்லை. செல்வா வீட்டுக்குப் போக ஆட்டோ பிடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, பிரதான சாலையில் கோயில் அருகில் கோயில் பணியாளர்கள் ஓரிருவர் பார்சல் பேப்பரில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கடை ஏதேனும் திறந்திருக்கிறதா என்று கேட்டேன். அருகில் உள்ள கடையை சொல்லி, அங்கு பாதி ஷட்டர் போட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றார்கள். அங்கு சென்று பார்சல் வாங்கிக்கொண்டேன். மட்டமான உணவு. வேறு வழி இல்லை. மூன்று வேளையும் அதேபோல்.

க.நா.சு. எழுதியுள்ளார், பேச்சிலர்களுக்கு ஒரு நாள் என்பது மூன்று வேளை, என்று.

பப்பு, ஸோரோ, ச்சிண்ட்டூ, ப்ளாக்கி, ப்ரௌனி, வொயிட்டி ஆகிய சாருவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அன்று மீன் தீர்ந்துவிட்டது. சாரு பிரபுவை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வந்து போக முடியுமா என்று கேட்டிருக்கிறார். பிரபு வந்தவுடன் அவருடன் மோட்டார் பைக்கில் பட்டினம்பாக்கம் மீன் சந்தைக்கு சென்று நாய்களுக்கும் பூனைகளுக்கும் தேவையான அளவு மீன் வாங்கிக்கொண்டு வந்துள்ளார்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் சாரு பிரபுவிடம் சொல்லியுள்ளார், ஸ்ரீராம் இன்று எங்கு சாப்பிடுவார் என்று தெரியவில்லையே, என்று. நான் வேண்டுமானால் உணவை டிஃபன் கேரியரில் போட்டு ஸ்ரீராம் வீட்டுக்குக் கொண்டு செல்லவா என்று பிரபு கேட்டுள்ளார். (என் வீட்டுக்கு வர கடற்கரை சாலையைத் தாண்டி வர வேண்டும்; அங்குதான் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் நடக்க இருந்தது.) "அவர் பிஸ்கட் பழங்கள் சாப்பிட்டு manage பண்ணிக்குவாரு. நீங்க அந்த வழியாகப் போயி சிக்கிக்காதீங்க," என்று சாரு சொல்லியுள்ளார். மதியம் மூன்று மணிக்கு சாரு தொலைபேசியில் அழைத்தார், "ஸ்ரீராம், எங்க சாப்பிட்டீங்க?"

சொன்னேன். ஆசுவாசமாக சிரித்தார்.

அடுத்த நாள், தினமும் சாப்பிடும் உணவகத்தில் அதன் உரிமையாளர் கேட்டார், "நேத்து வந்திருக்கலாம்ல சார்."

***

அடுத்த ஊரடங்கு நடப்பதற்கான அறிகுறிகள் சென்ற வாரம் அரங்கேறின. (நல்ல வேளை நடக்கவில்லை.) கூச்சப்படாமல் உணவக உரிமையாளரிடம் சொன்னேன், நாளை வருகிறேன்; உங்கள் உணவை எனக்கும் தாருங்கள் என்று. வீட்டுக்கே கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீங்க சார் என்றார்.