Wednesday, December 30, 2015

தண்ணீர் - விமர்சனம்



அசோகமித்ரனின் 'தண்ணீர்' சிறிய, ஆனால், காத்திரமான நாவல். ஜமுனா, சாயா, பாஸ்கர் ராவ், டீச்சரம்மா, அவள் குடும்பம், ஜமுனா வீட்டு உரிமையாளர், ஜமுனாவின் தாய், மாமாவின் குடும்பம் என குறைந்த பாத்திரங்களே உள்ளன.

தண்ணீர் பஞ்சம் ஒரு பாத்திரமாகவே இருக்கிறது. அந்தக் கால தி.நகரும் ஒரு பாத்திரம்.

தண்ணீருக்காக மக்கள் நாயாய் அலைகிறார்கள். ஒரு தவலைத் தண்ணீருக்காக யாராரிடமோ, டீச்சரம்மா சிரித்துப் பேசவேண்டியிருக்கிறது. மழைநீரைப் பிடிக்கக்கூட மக்கள் அடித்துக்கொள்கிறார்கள்.

ஏற்கனேவே கல்யாணமான பாஸ்கர் ராவிடம், ஜமுனா ஏமாறுகிறாள். டீச்சரம்மா சொல்வதுபோல், ஜமுனா இடங்கொடுக்காமல், இது நடந்திருக்காது.

தூக்குபோட்டு சாக இருந்த ஜமுனா, வீட்டு உரிமாயாளர் மாமியால், தற்செயலாகக் காப்பாற்றப்படுகிறாள். மாடியில் குடியிருக்கும் ஜமுனாவை மாமி அந்தத் தருணத்தில் காண வரும் சம்பவம், நாவலில் ருசியானது. படித்துப்பாருங்கள்.

டீச்சரம்மா ஜமுனாவிடம் ஆறுதல் கூறும் அத்தியாயம் மிகவும் பிடித்திருந்தது. நீ ஏன் யாரும் உன்னைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என நினைக்கிறாய்; நான் உன் மீது அக்கறைகொண்டுள்ளேன், என டீச்சரம்மா ஜமுனாவிடம் கூறுகிறாள். இதேபோல் ஒரு சம்பவம் சில ஆண்டுகள் முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'Precious' என்ற படத்திலும் வரும். கர்பமாக இருக்கும் தன் மாணவியிடம், ஒரு ஆசிரியை , " I love you, Precious, "  என்று கதறி அழுவாள். இந்நாவலில், இந்த இடத்தில் டீச்சரம்மா அழ மாட்டாள். ஆனால், அவள் சொல்லும் அத்தனையும் சோகம். இது அசோகமித்திரனின் எழுத்தின் பலம்.

பதினைந்து வயதிலேயே டீச்சரம்மாவுக்கு திருமணமாகிவிடுகிறது. கணவனுக்கு தொடர்ந்து இருமல் வரும் நோய். முதலிரவு அறையிலேயே, அவளைத் தொட முயன்று, தோற்று, மனம் வெம்பி, தொடர்ந்து இருமுகிறான். டீச்சரம்மா நினைக்கிறாள், இந்த நிலையில்கூட இவன் தன்னைத் தொட நினைகிறானே; இவன் இந்த நிலையில் இருந்தும்கூட இவனுக்குத் திருமணம் செய்ய இவன் பெற்றோர் நினைக்கிறார்களே; இவள் இவனைக் இன்றே கொன்றாலும், இவன் பெற்றோர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள். ஆனால், இவள் இவனைக் கண்டிப்பாக கொல்ல மாட்டாள் என்று இவன் பெற்றோர்கள் தீர்மானமாக நம்புகிறார்கள். இந்த நினைப்பே, டீச்சர்மாவுக்கு இனிமேல் உள்ள வாழ்க்கை இப்படித்தான், அதை வாழ்ந்து கழிக்கலாம் என்ற தீரத்தை தருகிறது. அவள் கோவிலுக்கு போவாள், ஆனால் கடவுளிடம் வேண்ட மாட்டாள். கடவுள் முன் குமுறி அழ மாட்டாள்.

டீச்சரம்மா சொல்கிறாள், எனக்கு அப்பொழுது, சாக வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை, என்று. இந்நாவலில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம் அந்த டீச்சர்ம்மாள்.

ஜமுனாவின் அம்மா நினைவு தப்பி, ஜமுனாவின் மாமா வீட்டில் இருக்கிறாள். தான் கல்யாணம் ஆன புதிதில், தன் மாமியார் பஜ்ஜிக்காக் இரண்டு படி பயிரை ஆட்டாங்கல்லில் அரைக்க சொன்னாள்; உரலின் பாதி உயரம்தான் நான் இருந்தேன்; உட்கார்ந்து அரைக்கமுடியவில்லை; நின்றபடியே அரைத்துக்கொடுதேன். உன் அப்பாவும், அத்தையும் வாயே திறக்கவில்லை; அவ்வளவு செய்தும், நான் சாப்பிட எனக்கு ஒரு பஜ்ஜிகூடக் கிடைக்கவில்லை, என்று புலம்புகிறாள்.

இந்திய பெண்களின் சோகத்தையும், குடும்பம் என்ற அமைப்பின் அடக்குமுறையையும், புழுக்கத்தையும், வன்முறையையும், ஜமுனாவின் தாய் மற்றும் டீச்சரம்மா ஆகியோர் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

ரொம்ப நல்ல நாவல். படித்துப் பாருங்கள்.

புத்தகத்தை வாங்க: http://www.nhm.in/shop/9788183680875.html