Tuesday, December 27, 2016

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்!

கிளிக்காவியம் ('தித்திக்காதே' தொகுப்பு) - மனுஷ்ய புத்திரன்

"நதிகள் உடைந்து
எனது நகரம் மூழ்கத் தொடங்கிய நாளில்
மக்கள் மேட்டு நிலங்களை நோக்கி
பைத்தியம் பிடித்தவர்களாக ஓடினார்கள்
யாருக்கும் உணவில்லை
தண்ணீர் இல்லை
கடைகள் மூடப்பட்டுவிட்டன
வளர்ப்பு நாய்களின் செத்த உடல்கள்
நீரில் மிதந்து சென்றன

நான் என் கிளிகளுக்கு
பழங்கள் கேட்டு
கொட்டுகிற மழையில்
தெருத்தெருவாக அலைந்தேன்
மூடப்பட்ட கடைகளின் கதவுகளை
கோபத்துடன் எட்டி உதைத்தேன்
ஒரு நகரத்தின் குழந்தைகள்
பசியோடு அழுதுகொண்டிருந்தபோது
நான் என் கிளிகளுக்கு
உணவு கொடுங்கள் என்று
நிர்பந்தித்தேன்."

இந்த வரிகளை சாரு நிவேதிதா வாசிக்கும்போது இடையில் சொல்கிறார்: "நானும் நிர்பந்திதேன், என் நாய்களுக்காக".




முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இறந்த அன்று நகரத்தில் எங்கும் கடைகள் திறந்திருக்கவில்லை. சரி, எங்குமே கடைகள் இல்லையெனில் செல்வகுமார், பிரபு காளிதாஸ், முத்துக்குமார் வீடுகளுக்கோ, மருத்துவ நண்பர்கள் வீடுகளுக்கோ சென்றுவிடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். சாரு காலையில் தொலைபேசியில் கேட்டார், எங்கு சாப்பிடப் போகிறீர்கள் என்று . ஏதேனும் கடை திறந்திருக்கும், தேட வேண்டும் என்று கூறினேன். செல்வகுமாரும் தொலைபேசியில் கூப்பிட்டு, எங்கும் கடை இல்லையெனில் வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லியிருந்தார். பேருந்துகள் ஓடவில்லை.

பிஸ்கட், பழங்கள் ஆகியவை ஒரு வேளைக்குத்தான் உதவும் என ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தில் உணர்திருந்தேன் - காவிரி பிரச்னை பந்த் அன்று.

முக்கால் மணி நேரம் தேடியும் ஒரு கடைகூட திறந்திருக்கவில்லை. செல்வா வீட்டுக்குப் போக ஆட்டோ பிடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, பிரதான சாலையில் கோயில் அருகில் கோயில் பணியாளர்கள் ஓரிருவர் பார்சல் பேப்பரில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கடை ஏதேனும் திறந்திருக்கிறதா என்று கேட்டேன். அருகில் உள்ள கடையை சொல்லி, அங்கு பாதி ஷட்டர் போட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றார்கள். அங்கு சென்று பார்சல் வாங்கிக்கொண்டேன். மட்டமான உணவு. வேறு வழி இல்லை. மூன்று வேளையும் அதேபோல்.

க.நா.சு. எழுதியுள்ளார், பேச்சிலர்களுக்கு ஒரு நாள் என்பது மூன்று வேளை, என்று.

பப்பு, ஸோரோ, ச்சிண்ட்டூ, ப்ளாக்கி, ப்ரௌனி, வொயிட்டி ஆகிய சாருவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அன்று மீன் தீர்ந்துவிட்டது. சாரு பிரபுவை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வந்து போக முடியுமா என்று கேட்டிருக்கிறார். பிரபு வந்தவுடன் அவருடன் மோட்டார் பைக்கில் பட்டினம்பாக்கம் மீன் சந்தைக்கு சென்று நாய்களுக்கும் பூனைகளுக்கும் தேவையான அளவு மீன் வாங்கிக்கொண்டு வந்துள்ளார்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் சாரு பிரபுவிடம் சொல்லியுள்ளார், ஸ்ரீராம் இன்று எங்கு சாப்பிடுவார் என்று தெரியவில்லையே, என்று. நான் வேண்டுமானால் உணவை டிஃபன் கேரியரில் போட்டு ஸ்ரீராம் வீட்டுக்குக் கொண்டு செல்லவா என்று பிரபு கேட்டுள்ளார். (என் வீட்டுக்கு வர கடற்கரை சாலையைத் தாண்டி வர வேண்டும்; அங்குதான் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் நடக்க இருந்தது.) "அவர் பிஸ்கட் பழங்கள் சாப்பிட்டு manage பண்ணிக்குவாரு. நீங்க அந்த வழியாகப் போயி சிக்கிக்காதீங்க," என்று சாரு சொல்லியுள்ளார். மதியம் மூன்று மணிக்கு சாரு தொலைபேசியில் அழைத்தார், "ஸ்ரீராம், எங்க சாப்பிட்டீங்க?"

சொன்னேன். ஆசுவாசமாக சிரித்தார்.

அடுத்த நாள், தினமும் சாப்பிடும் உணவகத்தில் அதன் உரிமையாளர் கேட்டார், "நேத்து வந்திருக்கலாம்ல சார்."

***

அடுத்த ஊரடங்கு நடப்பதற்கான அறிகுறிகள் சென்ற வாரம் அரங்கேறின. (நல்ல வேளை நடக்கவில்லை.) கூச்சப்படாமல் உணவக உரிமையாளரிடம் சொன்னேன், நாளை வருகிறேன்; உங்கள் உணவை எனக்கும் தாருங்கள் என்று. வீட்டுக்கே கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீங்க சார் என்றார்.

Wednesday, December 14, 2016

சாரு நிவேதிதா என்ற வசீகரன்

விசாரணை 'பாராட்டு விழா' கூட்டத்தில், அந்தப் பெண் தொகுப்பாளர், "வசீகரமான தோற்றம் கொண்ட சாரு நிவேதிதாவை பேச அழைக்கிறேன்," என்று சொன்னார். ஆனால், ஸ்ருதி டிவியும் வேறு எந்த YouTube சேனலும் அதைப் பதிவு செய்யவில்லை. (அந்த உரையை இது வரை  அனைத்து YouTube சேனல்களிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர்.)

"நாப்பது வருஷமா உடலை பரமாரிச்சதோட பலன் இது. Pedicure, manicure, facial, jogging, walking, yoga அப்படின்னு பார்த்து பார்த்து மெனக்கெட்டதோட பலன். யாரும் இதை ஷூட் பண்ணாம விட்டுட்டாங்களே," என்று சாரு அப்போது வருத்தப்பட்டார்.

(படிக்கவும்: எக்ஸைலில்  'பெருந்தேவி சொன்ன பாம்பு கதை', தில்லி கதை மற்றும் எக்சிஸ்டென்ஷலிசமும் ஃபேன்சி பனியனும்)

***

மதியம் ஸைத்தூனில் (எக்ஸ்ப்ரஸ் அவென்யூ எதிரில்) சாப்பிட்டுவிட்டு, நானும் சாருவும் ஆட்டோ பிடிக்க நின்றிருந்தோம்.

(EA வாசலில் நின்றுகொண்டிருக்கும் ஆட்டோவை கேட்டால், தாறுமாறாகக் கேட்பார்கள். மீட்டர் போட மாட்டார்கள். ஸைத்தூனில் இருந்து சாரு வீட்டுக்கு செல்ல, மீட்டர் போட்டால், அறுபது ருபாய் ஆகும்.)

இனி verbatim. (நடந்த உரையாடல் அப்படியே)

"அப்பு ஸ்ட்ரீட் போகணும்," என்று வந்துகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சாரு கேட்டார்.

"எரநூறு ரூபா சார்."

"ஏன், முன்னூறு ரூபா கேளுங்களேன்," என்று சொல்லிவிட்டு, வேறு ஆட்டோ பார்க்க ஆரம்பித்தார்.

நான் ஆட்டோ ஓட்டுனரிடம், "கை கொடுங்க," என்று சொல்லி, கைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

"அப்பு ஸ்ட்ரீட் போகணும்," என்றேன் நான். "மீட்டருக்கு மேல் இருபது ரூபா," என்று சாருவும் சொன்னார். சரி என்றதும் அமர்ந்தோம்.

"எரநூறு ரூவா கேட்குறான். அதான் கைக் கொடுத்துட்டு வந்தேன், சாரு."

"எப்படி இருக்கானுவ பாருங்க."

"நம்ம ரெண்டு பேருக்கும் கனவான் look இருக்குறதால, அப்படி கேக்குறானுங்க, சாரு. எவ்வளவு கேட்டாலும் தருவாங்கன்னு நம்புறாங்க."

"நம்மல பார்த்தா, மூனா பூனா மாதிரியாவா இருக்கு? நான் இளைஞனா இருந்திருந்தா, அவன் மூக்குலயே குத்தியிருப்பேன்."

(கனவான் தோற்றம் = மூனா பூனா. ROFL )

ஆட்டோ ஓட்டுனர் சொன்னார், "இப்பவும் நீங்க இளைஞன் மாதிரிதான் இருக்கீங்க, சாமி. என்ன தலதான் நரைச்சிருக்கு. அதுவும் இப்ப ஒரு ஸ்டைல்தான்."

"சாரு, இது second time. மிகப் பெரிய reward. நாப்பது வருஷமா உங்க உடம்பை ஆராதிக்கிறேன்ன்னு சொன்னீங்களே. அதுக்கான பலன்."

சாரு தனக்கே உரிய அந்த அழகான சிரிப்பை உதிர்த்தார்.