Friday, January 1, 2016

மெனிஞ்சியோமா - விமர்சனம்



நண்பர் செல்வக்குமார் கணேசன், "எனக்குப் பிடிக்கவில்லை; நீங்கள் டாக்டர் என்பதால் இந்த நாவல் உங்களுக்குப் புரியும்," என்று சொல்லிக் கொடுத்தார் இந்த நாவலை.

'மெனிஞ்சியோமா' என்பது மூளையில் வரும், உயிருக்கு ஆபத்தில்லாத ஒருவகை கேன்சர். அறுவைசிகிச்சை மூலம் சந்துருவுக்கு அந்த கட்டி அகற்றப்படுகிறது. அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் 'எனிமா'வில் ஆரம்பிக்கிறது சந்துருவுக்கான கஷ்டங்கள். அறுவைசிகிச்சைக்குப் பின் தீவிர கண்காணிப்பு வார்டில் அவன் படும் இல்லல்கள், வீட்டுக்கு வந்த பின் அவனுக்கு வரும் வலிப்பு, அதனால் அவன் மனமும் உடலும் படும் இல்லல்கள், அவன் தந்தையின் மன வருத்தம் ஆகியவற்றை இந்த நாவல் சொல்கிறது.

ஓரிடத்தில் 'discharge summary' என்று நோயாளியின் MRI சோதனையின் முடிவுகள் தரப்பட்டிருக்கிறது - அதுவும் தப்புந்தவறுமாக. ஆங்கில வார்தைகள் குறைக்கப்பட்டு, தேவையில்லாத மருத்துவ 'name droppings'-ஐ தவிர்த்திருந்தால், ஒரு நல்ல நாவல் கிடைத்திருக்கலாம். மூளையின் உள்ளமைப்பு, அதன் நரம்புப் பின்னல்கள், ரசாயன மாற்றங்கள் ஆகியவற்றை கூகிளில் இருந்து எடுத்து எழுதினதுபோல், செயற்கையாக, தேவையில்லாததாக உள்ளது.

சில பிணியாளர்கள் - அதுவும் குறிப்பாக முடக்குயியல் (Rheumatology) பிணியாளர்கள் - தங்கள் நோய்மை பற்றியும், அதற்கான மருந்துகள், மருத்துவ முறைகள் பற்றியும் நன்றாக, தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த நாவலில், கணேசகுமாரன், மருத்துவக் குறிப்புகளை, மூளை பற்றிய, மூளையின் ரசாயனங்கள் பற்றிய குறிப்புகள் இல்லாமல்கூட சந்துருவின் நோய்மையை, அவனின் வலியை வாசகனுக்குக் கடத்தியிருக்க முடியும். சாரு நிவேதிதாவின் 'ராஸ லீலா'வில் கண்ணாயிரம் பெருமாள் 'பைபாஸ்' அறுவைசிகிச்சைக்குப் பின், மருத்துவமனையில் இருக்கும் பிரதி, குறைவான மருத்துவ வார்த்தைகளுடன்தான் இருக்கும். ஆனால், படிக்கும் வாசகனுக்கு, கண்ணாயிரம் பெருமாளின் நோய்மை, அவனின் உடல்-மன வலி ஆகியவற்றை வாசகனுக்குக் கடத்தியிருப்பர் சாரு நிவேதிதா. ராஸ லீலாவில் intense-ஆன பகுதி அது.

சந்துருவின் அப்பா படும் கஷ்டத்தை மட்டும் கணேசகுமாரன் சரியாக, வாசகனுக்குக் கடத்தியிருகிறார். 

புதிய களம்; ஆனால், இன்னும் செறிவான வார்த்தைகள் (மருத்துவ வார்த்தைகள் அல்ல), இன்னும் சரியான கதைசொல்லல் இருந்திருக்கலாம். இருந்திருந்தால், ஒரு காத்திரமான பிரதி நமக்குக் கிடைத்திருக்கும்.

கணேசகுமாரனின் சிறுகதைகளை சாரு நிவேதிதா தனது வலைதளத்தில் பாராட்டியிருந்தார். படித்துப் பார்க்கவேண்டும்.